புதன், நவம்பர் 30, 2011

எனக்கும் படிப்புக்குமான தூரம்...

'தலை வாரி பூச்சூடி உன்னை,
பாடசாலைக்கு போ என்று சொன்னாளே அன்னை.
சிலை போல ஏன் இங்கு நின்றாய்?
நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?'
இந்த பாடல் என் பள்ளியில் பணிபுரிந்த ஒரு தமிழாசிரியர் பாடிக் கேட்டிருக்கிறேன். கல்வி என்பது ஒருவனின் தகுதியை தீர்மானிக்கிறது என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் அந்த
தகுதியை சம்பாதிப்பதற்கு என்னைப் போன்ற ஆட்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்று கேட்டால் கண்ணில் ரத்தமே வந்து விடும். அவ்வளவு சோகங்கள் நிறைந்தது என் பள்ளி வாழ்க்கை. சோகம் என்றால் 'பெரிய அளவுல கஷ்டப்பட்டிங்களோ?' என்று நினைக்க வேண்டாம். படிக்காதவன் படத்தில் தனுஷ் சொல்வது போல் 'வராத படிப்பை வா வான்னா எப்படி வரும்?' என்ற கஷ்டம் தான் அது.எல்.கே.ஜியிலிருந்து எட்டாம் வகுப்பு வரை நான் கொஞ்சம் நன்றாகவே படித்தேன். ஒன்பதாம் வகுப்பு வந்த பிறகு எனக்கு படிப்பு மேல் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டம் குறைய ஆரம்பித்தது. முக்கியமாக அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் சுத்தமாக இன்ட்ரஸ்ட் இல்லாமல் போய் விட்டது. போதாகுறைக்கு 'நீ ஒழுங்கா படிக்கலேன்னா உன்னை ஒரு ஆயிரம் ருபாய் சம்பளத்துக்கு வேலைக்கு அனுப்பி விடுவோம்' என்று கூட என்னை மிரட்டிப் பார்த்தார்கள். ஆனால் என் புத்தி, 'ஓஹோ, வேலைக்கு போனால் ஆயிரம் ருபாய் சம்பளம் வருமா? அப்போ வேலைக்கே போயிடலாமே?' என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன். பாவம் என் அப்பாவும் அம்மாவும். எங்களின் பொருளாதார பிரச்சனைகளுக்காக இருவருமே வேலைக்கு போய்க் கொண்டிருந்த காலம் அது.
எனக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, படிப்பறிவும் போதவில்லை. காலப்போக்கில் நண்பர்களின் சகவாசத்தால் நான் பள்ளிக்கு செல்லாமல் 'கட்' அடிக்க ஆரம்பித்து விட்டேன். பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு ஏங்கும் போக மாட்டேன். என் நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு நேராக என் வீட்டிற்கு போய் விடுவேன். அப்பாவும் அம்மாவும் வேலைக்கு சென்றதால் எனக்கு அது கொஞ்சம் வசதியாக போய் விட்டது. 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது' போல ஒரு நாள் என் தந்தையிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். அடிப் பின்னி எடுத்து விட்டார் மனிதர். 'இவனை இப்படியே விட்டால் சரியாக இருக்காது. ஏதாவது செய்ய வேண்டும்' என்று என் பெற்றோர்கள் முடிவெடுத்து என்னை என் பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். அங்கே தான் எனக்கான 'அதிரடியே' ஆரம்பித்தது.
எனக்கு பெரியப்பா மகன்கள் மூன்று பேர். மூவரும் அண்ணன் தம்பிகள். இந்த மூவரில் இரண்டாவதாக இருந்த அண்ணன் தான் என் அப்பாவிடம் 'இவனை என் பொறுப்புல விடுங்க. நான் இவனை பாஸ் பண்ண வைக்கிறேன்' என்று தன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார். இவருடைய ரூட்டு என்னன்னா 'அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' என்பது தான். அடி எனக்கு கன்னா பின்னாவென்று அவரிடமிருந்து விழும். வடிவேலு திரைப்படங்களில் சொல்லும் 'அலாரம் வைத்து அடி வாங்குவது' எல்லாம் நான் வாங்கி இருக்கிறேன்.

எப்படி என்றால், அதிகாலையில் எழுந்து படிப்பதற்கு அலாரம் வைத்துப் படுத்துக்கொள்வேன். காலையில் அலாரம் அடித்தால் அதை அனைத்து விட்டு தூங்கிவிடுவேன். ஒரு ஜக்கு தண்ணீரை எடுத்து என் அண்ணன் தூங்கிக் கொண்டிருக்கும் என் மீது ஊற்றி, 'படிக்காம என்னடா தூக்கம்?' என்று இரண்டு உதை விட்டு 'தூங்குடா' என்று சொல்லி விட்டு போய் விடுவார். காலையில் எழுந்தால் 'ஏண்டா, நான் தூங்குன்னு சொன்னா நீ தூங்கிடுவியா?' என்று திரும்பவும் அடி விழும். அப்போது அடி வாங்கியது அன்றைக்கு அது வேதனையான விஷயம். ஆனால் இன்றைக்கு அதை நினைத்தால் 'நாமளும் நெறைய கிறுக்குத்தனம் பண்ணியிருக்கோம்ல?' என்ற சிரிப்பு தான் வருகிறது.
நான் இப்படி எல்லாம் அடி வாங்குவதை பார்த்த என் பெரிய அண்ணன், ஒரு நாள் 'டேய், அவன் உன்னை இந்த அடி அடிக்கிறானே? இதுக்காகவாவது நீ ஒழுங்கா படிக்கலாமே' என்று சொன்னார். அப்போது மட்டும் 'வின்னர்' படம் வெளிவந்திருந்தால் அதில் வரும் ஒரு டயலாக்கை நான் இப்படி சொல்லியிருப்பேன். 'அண்ணே, போங்கண்ணே. ஊருக்குள்ள போய் கேட்டுப்பாருங்க. நாங்க அடி வாங்காத ஏரியாவே கெடயாது. எவ்வளவு அடிச்சாலும் சத்தமும் வராது, ஓடுனதும் கெடயாது. என்னமோ ரெண்டு அடி வாங்குனதை பார்த்துட்டு பெருசா அட்வைஸ் பண்றீங்க? ஹலோ சின்னண்ணே, என்ன நேத்து அடிக்க வருவேன்னிங்க வரேவே இல்ல?' என்று.
உலகத்திலேயே ரொம்ப திமிர் பிடித்த ஆள் யார் என்று கேட்டால் நான் முதலில் சொல்லும் பெயர், என் பெயர் தான். ஏனென்றால், அவர்கள் என்னை எப்படியாவது 'பாஸ்' பண்ண வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அடித்தார்களே தவிர வேண்டுமென்றே அடிக்கவில்லை. எனக்கோ 'இவர்கள் அடித்து நான் பாஸ் ஆகிவிட்டால் அது நான் அடிமையானது போல. அதனால் நான் பாஸாகக் கூடாது. வேலைக்கே போய் விடலாம்' என்றிருந்தேன். அது மட்டுமல்ல, எனக்கு படிப்பும் சுத்தமாக ஏறவே இல்லை. இறுதியாண்டு பரீட்சை எழுதி விட்டு, வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது என் பெரிய அண்ணன் கேட்டார் 'பரீட்சை நல்லா எழுதி இருக்கிறியா டா? எவ்வளவு மார்க் வரும்?' என்று கேட்க, நானோ 'ஒரு ஏழு மார்க் வந்தா பெரிய விஷயம்' என்று பதில் சொன்னேன்.

பரீட்சை முடிவு நான் எதிர்ப்பார்த்த மாதிரியே 'பெயில்' என்று வந்தது. 'சரி, நம்மளை இனி வேலைக்கு அனுப்பப் போறாங்க' என்று நினைக்க ஆரம்பித்த அந்த நேரத்தில் என அப்பா ஒரு காரியம் செய்தார். நான் படித்தது கான்வென்ட் பள்ளியில். அங்கே உள்ள பிரின்சிபாலிடம் பேசி எனக்கு பாஸ் போட வைத்து, அந்த பள்ளியில் இருந்து மாற்றி இன்னொரு பள்ளியில் சேர்த்தார்கள். 'ஏன் இப்படி செஞ்சிங்க?' என்று மற்றவர்கள் கேட்டதற்கு 'அந்த ஸ்கூல் சிலபஸ் கஷ்டமா இருக்குறதுனால தானே அவன் பெயில் ஆனான்? இப்போ சேர்த்தது கவர்மண்ட் ஸ்கூல். இனிமே ஈஸியா படிப்பான்' என்று சொல்லி விட்டார். ஆனால் ஒன்று. அன்று மட்டும் அவர் கோபத்தில் 'வேலைக்குப் போடா' என்று சொல்லி என் படிப்பை நிறுத்தியிருந்தால் என் வாழ்க்கை நாசமாகி இருக்கும். இந்த நேரத்தில் என் அப்பாவை கை எடுத்துக் கும்பிடவே தோன்றுகிறது. Iam Very Thankful to you Daddy.



(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


11 கருத்துகள்:

  1. // ஆனால் இன்றைக்கு அதை நினைத்தால் 'நாமளும் நெறைய கிறுக்குத்தனம் பண்ணியிருக்கோம்ல?' என்ற சிரிப்பு தான் வருகிறது. //

    இந்த வாக்கியம் படிப்பு மட்டுமில்லாமல் எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்...

    பதிலளிநீக்கு
  2. நிறைய இடங்களில் என்னுடைய கதையை படித்தது போலவே இருந்தது... நானும் ரொம்ப திமிர் பிடிச்சவன் தான்...

    பதிலளிநீக்கு
  3. ஏன் பாதியிலேயே நிறுத்திட்டீங்க... கவர்மென்ட் ஸ்கூல்ல சேர்ந்த அப்புறம் என்ன ஆச்சு...?

    பதிலளிநீக்கு
  4. ஹா.ஹா.ஹா.ஹா.............உங்களால் டயலாக் பேசமுடியாமல் போனதுக்கு வின்னர் படத்தை அப்ப எடுக்காததுக்கு சுந்தர்.சி க்கு கடுமையான கண்டணங்கள்.ஹி.ஹி.ஹி.ஹி

    பதிலளிநீக்கு
  5. இவர்கள் அடித்து நான் பாஸ் ஆகிவிட்டால் அது நான் அடிமையானது போல. அதனால் நான் பாஸாகக் கூடாது. வேலைக்கே போய் விடலாம்' என்றிருந்தேன்.

    தன்னம்பிக்கை சிந்தனை????

    பதிலளிநீக்கு
  6. ஹா ஹா ஹா கொஞ்சம் பழைய நினைவுகள் உங்களுக்கு ஆனது மாதிரி தான் அறிவியலும் கணக்கும் எட்டிக்காயாய் இருந்தது எப்பிடியோ எஸ்கேப் ஆயிட்டேன்..

    பதிலளிநீக்கு
  7. சில இடங்களில் என் சிறுவயதை ஞாபகபடுத்தியது...

    பதிலளிநீக்கு
  8. அருமை... அருமை... வாழ்க வளமுடன்.
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. ராஜேஷ் அண்ணன்08 டிசம்பர், 2011 19:30

    ரொம்ப சந்தோஷம் புஜ்ஜி அடி,உத மட்டும் மனசுல இல்லாம எதுக்காக அடி வாங்னனோம்னு யோசிச்சு எழுதினதுக்கு.இன்னிக்கு நீ நல்ல இடத்துக்கு வந்து இருக்ரத பாத்து சந்தோஷபடரதுல அண்ணண்கள் முதல்ல இருப்போம்
    வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்வதர்க்கும் வளமான வாழ்க்கைக்கும்

    ராஜேஷ் அண்ணன்

    பதிலளிநீக்கு