திங்கள், ஏப்ரல் 25, 2011

சூப்பர் ஸ்டாரின் 'மாப்பிள்ளை' - திரை விமர்சனம்





கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தை பார்த்தேன். படம் பார்த்த எனக்கு தனுஷ் மீதும், இயக்குனர் சுராஜ் மீதும் பயங்கரமான கோபம் வந்தது. ஒரு சூப்பர் ஸ்டார் நடித்த படத்தை, அதுவும் வசூலில் பெரும் சாதனை படைத்த படத்தை எவ்வளவு கேவலமாக எடுக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக எடுத்ததை
பார்த்தபோது கோபம் வராமல் இருக்குமா? அடுத்த நாள் காலையில் ரஜினி நடித்த படத்தை திரும்பவும் பார்க்க வேண்டும் என்ற ஆசைப்பட்டு படத்தை Download செய்து பார்த்தேன். அதுமட்டுமல்ல, இந்த படத்தை நம் பதிவில் திரை விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். காரணம், தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' விமர்சனத்தை படித்து கடுப்பாக இருப்பவர்களுக்கு, ரஜினியின் 'மாப்பிள்ளை' விமர்சனம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று தான் எழுதுகிறேன்.



சென்னையில் இருக்கும் வேலையில்லா பட்டதாரி ஆறுமுகத்தின் நல்ல குண நலன்களால் ஈர்க்கப்பட்டு அவரை காதலிக்கிறார் கோடீஸ்வரி ராஜ ராஜேஸ்வரியின் மகள் கீதா.இதற்கிடையில் ஆறுமுகத்தின் தங்கை அதே கோடீஸ்வரியின் மகனை காதலித்து கர்ப்பமாகிறார். தங்கையை காதலித்து கர்ப்பமாக்கிய கோடீஸ்வரியின் மகனை தன் தங்கைக்கே மணமுடித்து, கூடவே அந்த கோடீஸ்வரி மகளைக் காதலித்து கல்யாணம் பண்ணி, அந்த கோடீஸ்வரியின் பண திமிரை அடக்கும் ஆறுமுகத்தின் படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மாப்பிள்ளை'.

மாமியாரின் பணத்திமிரை அடக்கும் ஆறுமுகமாக ரஜினி. தலைவர் படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு Getup போட்டுக்கொண்டு வருவார் பாருங்கள், அதிலிருந்து ஆரம்பிக்கும் ரஜினியின் ஆவர்த்தனம். சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார். அமலாவிடம் 'என் மூக்கு மேல விரல வெச்சிட்டியேடி' என்று குடித்துவிட்டு பண்ணும் அலப்பறை செம ரகளை. அதே போல ஸ்ரீவித்யாவிடம் 'அம்மா, நீங்க தமிழ்நாட்டுக்கே ராணி மாதிரி. நான் தமிழ்நாட்டுக்கே.... விடுங்க. அதை என் வாயாலேயே சொல்லிக்குவானேன்?' என்று பஞ்ச் அடிக்கும் காட்சி, செம. இந்த படம் என் All Time Favorite ரஜினி படங்களுள் ஒன்று.


ரஜினியின் பணத்திமிர் பிடித்த மாமியாராக மறைந்த நடிகை ஸ்ரீவித்யா. இந்த படத்தில் ரஜினிக்கு நிகரான பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் இவர். இந்த மாமியார் வேடத்திற்கு நடிகை வைஜயந்தி மாலாவை தான் நடிக்கக்கேட்டார்கள். அவர் மறுத்து விடவே ஸ்ரீவித்யா இந்த வேடத்தில் நடித்தார். ஆனால் அருமையாக நடித்துள்ளார். பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, கழுத்து நிறைய நகைகள் போட்டுக்கொண்டு இவர் வசனம் பேசும் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமை. ஒரு பணத்திமிர் பிடித்த மிடுக்குடன், மாமியார் கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார். ரஜினியின் ஜோடியாக அமலா. வழக்கமாக காதல் காட்சிகளிலும், டூயட் காட்சிகளில் ஆடுவதோடு சரி. பெரிதாக அவரை இந்த படத்தில் உபயோகப்படுத்தவில்லை. ஸ்ரீவித்யாவின் அண்ணாக வினுச்சக்ரவர்த்தி. வினுவின் நண்பராக எஸ்.எஸ்.சந்தரன். 'இப்படித்தான் வேலூர்ல' என்று தன் ஜெயில் அனுபவத்தை வாய்தவறி உளறுவதும், விந்தி விந்தி நடப்பதுமாக காமெடியில் நன்றாக ஸ்கோர் செய்கிறார் நகைச்சுவை செல்வர். படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் திரைக்கதை, வசனம் பஞ்சு அருணாசலம். ரஜினிக்கு ஏற்றவாறு விறுவிறு திரைக்கதையும், அருமையான பஞ்ச் வசனங்களும் மிக அழகாக பொருந்தியிருக்கிறது. படத்திற்கு இசை, இளையராஜா. படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமை. குறிப்பாக, 'என்னோட ராசி நல்ல ராசி' பாடல் எல்லா ரஜினி ரசிகர்களுக்கும் பிடிக்கும். படத்தை இயக்கியது ராஜசேகர். இது ஒரு Remake படமாக இருந்தாலும், அதை தமிழுக்கேற்றார் போல அருமையாக இயக்கியிருக்கிறார். படத்தை தயாரித்தது தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த்.

மாப்பிள்ளை திரைப்படம் 28 அக்டோபர் 1989 அன்று வெளிவந்தது. சென்னையில் அலங்கார் , மகாராணி, அன்னை அபிராமி, கமலா, ஸ்ரீபிருந்தா என்று பல திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி நடை போட்டது. இந்த படம் எத்தனை நாட்கள் ஓடியது என்பதை பற்றி நான் சொல்லவேண்டியது இல்லை. மேலே இருக்கும் இரண்டு போஸ்டர்களை பார்த்தாலே தெரியும். இந்த படம் ரஜினியின் 124 வது படம் ஆகும். இந்த படம் அந்த வருடத்தில் வெளியான ரஜினி படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுவே ஆகும். இந்த படம் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து பெரும் வெற்றி பெற்ற 'அத்தகு யமுடு அம்மாயிகி மொகுடு' என்ற படத்தின் ரீமேக் ஆகும்.









(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

5 கருத்துகள்:

  1. நல்லா எழுதி இருக்கீங்க.. ஸ்டில்ஸை தேடி உழைத்து கண்டு பிடிச்சுப்போட்டதுக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு

    பதிலளிநீக்கு
  2. படையப்பா திரைப்படத்திற்கு இது ஒரு அடித்தளமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன் விமர்சனம் அருமை

    பதிலளிநீக்கு
  3. அருமை. படத்தோட நிறுத்துவது தான் அவருக்கே அழகு அரசியல் என்ற சாக்கடை இருந்து தப்பித்து விட்டார்

    பதிலளிநீக்கு