வியாழன், ஆகஸ்ட் 04, 2011

ஹிட்லரின் 'ஜெர்மானிய' விசுவாசிகளும், துரோகிகளும் - ஒரு பார்வை

அடோல்ப் ஹிட்லர், இரண்டாம் உலகப்போரை தொடங்கி வைத்த ஜெர்மன் சான்ஸ்லர். இனக் கோட்பாட்டைப் பின்பற்றி ஜெர்மானியர் அல்லாதவர்களை, குறிப்பாக யூதர், ஸ்லாவியர் மற்றும் கம்யூனிஸ்ட்களை லட்சக் கணக்கில் கொலை செய்ய உத்தரவிட்டவர். நாஜிக் காட்சியை தொடங்கி 1933 -இல்
ஆட்சியைப் பிடித்தவர். முதல் உலகப்போரில் இளநிலை படைவீரனாக பணிபுரிந்தார். புரட்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 1923 -இல் சிறை பிடிக்கப்பட்டார். தனது சுயசரிதையில் ஜெர்மன் இனத்தை பற்றி உயர்வாக மதிப்பிட்டு அவர்கள் பிறரை ஆளப்பிறந்தவர்கள் என்று கூறியுள்ளார். முதல் உலகப் போரின் விளைவாக ஜெர்மனி மீது திணிக்கப்பட்ட நிபந்தனைகளை உடைத்து ஆயுத உற்பத்தியை அதிகரித்தார். ரைன்லேன்ட், ஆஸ்திரியா, செக்கோஸ்லாவாகியா, பிரான்ஸ், போலந்து, சோவியத் என்று அவரது ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. பெர்லினை சோவியத் படைகள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தான் ஹிட்லரின் வரலாறு. ஆனால், ஹிட்லருக்கு முதுகெலும்பாக இருந்து உழைத்த சில வீரர்களையும், அவருடனே இருந்து ஹிட்லருக்கே குழி பறிக்க முயன்ற சில துரோகிகளையும் பற்றி தெரியப்படுத்துவதற்கே இந்த பதிவு.

காட்ரியன் (1888 - 1954):
ஜெர்மனியின் பன்சர் என்ற டாங்கி படை வெற்றிக்கு மூல காரணமாக இருந்தவர். டாங்கிகளை போரில் பயன்படுத்துவதை பற்றி 1937 -இல் ஒரு நூல் எழுதினார். போலந்து, பிரான்ஸ், சோவியத் ஆகிய பகுதிகளில் டாங்கி படையை திறமையாக செயல்படுத்தினார். தனது மேலதிகாரி குளுஜ் எனபவரின் கட்டளையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு ஹிட்லரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் பதவியமர்த்தப்பட்டு குர்ஸ்க் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டார். துருப்புகளை நகர்த்துவதில் இவர் திறமையாக செயல்பட்டபோதிலும் ஹிட்லர் இவரது திட்டத்தை சில நேரங்களில் ஏற்கவில்லை. போர் முடிவுக்கு வரும் வேளையில் மீண்டும் ஒரு முறை பதவி நீக்கம் செய்யப்பட்டார். கமாண்டர் மட்டுமின்றி ஒரு சிந்தனையாளராகவும் இவர் இருந்தார்.

டூநிட்ஸ் (1891 - 1980):

ஜெர்மன் கடற்படைத் தலைவர். அட்லாண்டிக் பகுதியில் யூ-போட்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர். ஹிட்லரின் தன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். தனக்குப் பிறகு ஜெர்மனியை ஆட்சி செய்யும் பொறுப்பை இவருக்கு ஹிட்லர் அளித்திருந்தார். போருக்குப் பிறகு நேசநாடுகளின் விசாரணைக் குழுவால் பத்தாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டார்.

ஹால்டர் (1884 - 1971):
முதல் உலகப் போரின்போது பவேரியா அரண்மனையில் அதிகாரியாக இருந்தார். 1938 -இல் ராணுவ தளபதியாக ஹிட்லர் இவரை நியமித்தார். ஹிட்லரைப் பற்றி இவருக்கு நல்ல கருத்து கிடையாது. இருந்த போதிலும், போலந்து, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றின் மீது போர்தொடுக்கும் திட்டத்தை தயார் செய்து கொடுத்தார். ஹிட்லரை வீழ்த்துவதற்கு பல சதிகளில் ஈடுபட்டவர். ஹிட்லரைக் கொல்ல சதி செய்த குற்றத்திற்காக 1944 -இல் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போருக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். ஹிட்லருக்கு எதிரான சாட்சியாக மாறி நேச நாடுகளின் விசாரணையில் முக்கிய தடயங்களை வெளிப்படுத்தினார்.


போர்மென் (1900 - 1945):
ஹிட்லரின் செயலாளர். ஆரம்ப காலத்திலிருந்தே நாஜிக்கட்சியில் தீவிரமாகப் பங்கேற்று தேசிய அளவிலான பொறுப்புக்கு உயர்த்தப்பட்டவர். ஹிட்லரை சந்திப்பதற்கு இவரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஹிட்லரின் பேரில் ராணுவ தளபதிகளிடமும் செல்வாக்கு செலுத்தியவர். இறுதி காலத்தில் ஹிட்லருடன் சுரங்க அறையில் இருந்தார். ஹிட்லர் தற்கொலைக்குப் பிறகு சோவியத்துடன் சமாதான முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதே நாளில் கொல்லப்பட்டார்.


ஜோடல் (1890 - 1946):

பவேரியாவில் பீரங்கிப் படை அதிகாரியாக இருந்தவர். 1939 -இல் ஜெர்மன் ஆயுத படைத் தலைவராக ஹிட்லரால் நியமிக்கப்பட்டார். கெய்டல் எனபவரின் கீழ் பணியாற்றி நாசித் துருப்புகளின் மோதல் திட்டங்களை உருவாக்கினார். நாள்தோறும் இரண்டு முறை நடைபெறும் ஹிட்லரின் ராணுவ கூட்டத்திற்கு தவறாமல் பங்கேற்று ஹிட்லரின் திட்டத்துக்கு செயல்முறை வழிகளை எடுத்துக் காட்டுவார். ஹிட்லரைக் கொல்ல மறைமுகமாக சதி செய்தார். ஹிட்லர் தற்கொலைக்குப் பிறகு ரைம்ஸ் பகுதியில் ஜெர்மன் துருப்புகளை சரணடையச் செய்தார். போருக்குப் பிறகு நியூரேம்பெர்க் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

கால்டன்பிரசன்னர் (1902 - 1946):

நாஜிக்களின் பாதுகாப்புப் படை அதிகாரி மரண முகாம்களில் யூதர்களை சித்திரவதைப் படுத்தியதில் முன்னிலையில் இருந்தவர். இவரின் நடவடிக்கைகள் இவரது மேலதிகாரி ஹிம்லர் என்பவரையே அச்சுறுத்தின. நியூரேம்பெர்க் விசாரணையில் குற்றவாளியாக்கப்பட்டு 1946 அக்டோபர் 16 அன்று தூக்கிலிடப்பட்ட 10 நாஜி அதிகாரிகளில் இவர் மூன்றாவதாக இருந்தார்.

கெசல்ரிங் (1885 - 1960):

மிகத்திறமையான ஜெர்மன் படைத் தலைவர். பவேரியா பீரங்கிப் படை அதிகாரியாக இருந்து லூப்ட்வாபே விமானப்படைக்கு வந்தவர். போலந்து, பெல்ஜியம், பிரிட்டன் மீது குண்டு வீச்சை நடத்தியவர். லண்டன் மீது பகல்போழுதிலேயே வான் தாக்குதல் நிகழ்த்தியவர். ஆனால் இதில் விமான இழப்பு அதிகமாகவே சீ லயன் திட்டத்தை ஹிட்லர் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. வட ஆப்ரிக்கா மற்றும் மத்தியத் தரைக் கடல் பகுதியிலும் ரோமல் படைக்குத் துணையாக தாக்குதல் நிகழ்த்தினார். சிசிலி மற்றும் இத்தாலியிலும் நேசப் படைகளை எதிர்த்துத் தாக்குதல் நடத்தினார். ருன்ஸ்டெட் என்பவருக்குப் பதிலாக இவர் தலைமைக் கமாண்டராக நியமிக்கப்பட்டார். போருக்குப் பிறகு அமெரிக்கத் துருப்புகளிடம் சரணடைந்தார். விசாரணைக்குப் பிறகு மரணதண்டனை அளிக்கப்பட்டு பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. உடல் சீர்கேட்டால் 1952 -இல் விடுவிக்கப்பட்டார்.

கோயபல்ஸ் (1897 - 1945):
ஹிட்லருக்கு நெருக்கமான நாஜிகளில் ஒருவர். கொள்கை பிரசார அமைச்சராக இருந்தார். இறுதிவரை தனது பிரசார உத்தியினால் நாசிப் படைக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியவர். பல பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டங்கள் பெற்றவர். கடைசி காலத்தில் சுரங்க அறையில் ஹிட்லருடன் இருந்தார். ஹிட்லரின் திருமணத்தில் ஒரு சாட்சியாகவும் இருந்தார். ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட மறுநாள் தனது ஆறு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டு தன் மனைவியையும் சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்டு இறந்து விட்டார். இறுதிவரை ஹிட்லரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தார். காலில் சிறிது ஊனம் இருந்ததால் ராணுவத்தில் பணிபுரியும் கனவு நனவாகாமல் கொள்கை பிரசார பணியை மேற்கொண்டிருந்தார்.

கிளைஸ்ட் (1881 - 1954):

திறமையான ஜெர்மன் தாங்கிப் படைக் கமாண்டர். உக்ரைன், கீவ், யூமன், பேகு, காகசஸ், மோஸ்டாக் முதலிய பகுதிகளில் மோதலை நிகழ்த்தியுள்ளார். காட்ரியன், ஹோத் ஆகியோரின் படைப்பிரிவுகளும் இவர் தலைமையில் செயல்பட்டன. சோவியத் படைகளால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலேயே இறந்துவிட்டார்.

குளுஜ் (1882 - 1944):

ஜெர்மனியின் நான்காவது படையை வெற்றிகரமாக செயல்படுத்திய கமாண்டர். போலந்து மற்றும் பிரான்சில் தனது துருப்புகளை வெற்றி பெறச் செய்தார். சோவியத் மோதலின் போது ஹிட்லரின் அனுமதியோடு தனது படையை பின்னோக்கி நகர்த்தினார். ருன்ஸ்டெட் மேல் ஹிட்லர் நம்பிக்கையிழந்த பிறகு மேற்குப் பகுதி படைப்பிரிவுக்கு இவர் கமாண்டோவாக நியமிக்கப்பட்டார். ஹிட்லருக்கு எதிரான சதியில் சேர மறுத்து விட்டார். இருந்த போதிலும் நேசப்படையுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டாரோ என்ற ஐயத்தில் ஹிட்லர் இவரை பெர்லினுக்கு அழைத்தார். வழியிலேயே விஷத்தை விழுங்கி தற்கொலை செய்து கொண்டு ஹிட்லர் மீதான விசுவாசத்தை நிரூபித்தார்.

கிரீஷ்மர் (1912 - 1964):

ஜெர்மனியின் யூ-போட் கமாண்டர். நேசப்படை கப்பல்கள் பலவற்றை இவர் மூழ்கடித்துள்ளார். ஒரு முறை ஏழு கப்பல்களை மூழ்கடித்துள்ளார். இதற்காக ' நைட்ஸ் கிராஸ்' விருதைப் பெற்றுள்ளார். 1941 -இல் நேசப்படை கப்பல்கள் இவரது நீர்மூழ்கியைச் சுற்றி வளைத்து சரணடையச் செய்தன. எஞ்சிய போர்க்காலத்தில் பிரிட்டனிலும் கனடாவிலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கோயரிங் (1893 - 1946):
நாஜிக்கட்சியில் தொடக்கத்திலேயே தன்னை இணைத்துக்கொண்டார். ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபிறகு பிரஷ்யாவின் உள்துறை அமைச்சரானார். ரகசிய போலீஸ் துறையை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரின் போது லூப்ட்வாபே என்று ஜெர்மன் விமானப் படையின் தலைவரானார். தற்பெருமையும் ஆடம்பரமும் நிறைந்தவர். ஹிட்லர் பிடிபட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ தான் ஜெர்மன் தலைவராகப் பொறுப்பேற்க விரும்புவதாக ஹிட்லருக்கே ஒரு செய்தி அனுப்பியிருந்தார். இதனால் எரிச்சலடைந்த ஹிட்லர் இவரை கைது செய்ய உத்தரவிட்டார். போருக்குப் பிறகு அமெரிக்கப் படையினரால் பிடிபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். போர் குற்றங்களுக்கு தாமே போருப்பெர்ப்பதாக துணிச்சலாக கூறினார். தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அதற்கு முன்பே விஷத்தை விழுங்கி தற்கொலை செய்து கொண்டார்.

க்ருப் (1907 - 1967):

ஜெர்மனியின் தொழிலதிபர். போர்க் காலத்தில் தளவாடங்களை உற்பத்தி செய்தவர். தொழிற்சாலைகளில் போர்க் கைதிகளையும் ஜெர்மனி ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள அப்பாவி மக்களையும் வேளை வாங்கியவர். மரண முகாம்களுக்கு அருகிலும் தனது தொழிற்சாலைகளை உருவாக்கி யூதர்களையும் பிற கைதிகளையும் கடினமான பணியில் ஈடுபடுத்தியவர். ஹிட்லர் இவருக்கு 'நாஜி கிராஸ்' விருதை அளித்து போர்க்கால பொருளாதார தலைவராகவும் பதவியளித்தார். 1944 -இல் அமெரிக்கப் படை இவரை கைது செய்தது. போருக்குப் பிறகு விசாரிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

மான்ஸ்டைன் (1887 - 1973):

போர்க்காலத்தில் மிகத் திறமையான கமாண்டர் எனப் பெயர்பெற்ற ஜெர்மானியர். திட்டமிடுதலும் படைகளை நகர்த்துவதிலும் திறமையானவர். பிரான்ஸ், ஆங்கிலக் கால்வாய், சோவியத் ஆகிய பகுதிகளில் மோதலை நிகழ்த்தியுள்ளார். சோவியத் பகுதிகளில் வேகமாக முன்னேறியவர். ஸ்டாலின்கிராடில் இவருக்குப் பின்னடைவு ஏற்ப்பட்டது. தொடக்கத்தில் இவர் பின்வாங்க ஹிட்லர் அனுமதித்த போதிலும் பிறகு இவரை பதவி நீக்கம் செய்துவிட்டார். முன்னதாக, கிரிமியா பகுதியை தாங்கிப் படையைக் கொண்டு இவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மார்ச் 1944 -இல் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது எஸ்டேட்'இல் மீதி காலத்தைக் கழித்தார். நவீன போர் முறையின் கர்த்தாவாக இவர் கருதப்படுகிறார்.

மாடல் (1891 - 1945):

ஹிட்லருக்கு நம்பகமான கமாண்டர். பிரான்சில் தனது டாங்கிப் படையையும் சோவியத்தில் பதினாறாவது படையையும் வெற்றிகரமாக முன்னேறியவர். குர்ஸ்க், பால்டிக் பகுதி, பெல்ஜியம், ஹாலந்து ஆகிய பகுதிகளில் மோதலை நிகழ்த்தியுள்ளார். ரூர் பகுதியில் நேசப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது சரணடைய மறுத்து தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.


ஹிம்லர் (1900 - 1945):
ஹிட்லருக்கு நெருக்கமான நாசித் தளபதி. எஸ்.எஸ். என்ற பாதுகாப்பு படையின் தலைவர். எஸ். ஏ. என்ற சூறாவளிப் படையிலிருந்த ஹிட்லருக்கு எதிரானவர்களை சுமார் 1000 பேரைத் தீர்த்து கட்டியவர். உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். மரண முகாம்களின் நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியவர். விஸ்டுலா படையின் கமாண்டராகவும் நியமிக்கப்பட்டார். நாஜிக் கொள்கையில் மிகுந்த பற்றுள்ளவர். ஹிட்லர் இவரை துரோகி என்று சாதியத்தைத் தொடர்ந்து மனமுடைந்து விட்டார். போருக்குப் பிறகு பிரிட்டிஷ் துருப்புகளால் பிடிபட்டு விசாரணைக்கு உட்படும் முன்பே விஷத்தை விழுங்கி தற்கொலை செய்து கொண்டார்.

ரேடர் (1876 - 1960):

ஜெர்மன் கடற்ப்படை கமாண்டர். இரண்டாம் உலகப்போரின் ஆரம்ப காலத்தில் ஜெர்மன் கடற்ப்படையை திறமையாக உருவாக்கி யூ-போட்களையும் ஈடுபடுத்தியவர். நார்வே பகுதியில் நேசப்படைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர். பிற்காலத்தில் இவருக்கும் ஹிட்லருக்கும் தாக்குதல் பற்றி கருத்து வேறுபாடு எழுந்தது. ஹிட்லரின் திட்டங்கள் பல முறை தோல்வியை வரவழைத்ததை இவர் எடுத்துக் காட்டினார். ஹிட்லர் இவரை பதவி நீக்கம் செய்து டூநிட்ஸ் என்பவரை நியமித்தார். போருக்குப் பிறகு நியூரேம்பெர்க் விசாரணையில் போர்க் குற்றத்துக்காக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.

ருன்ஸ்டெட் (1875 - 1953):

ஜெர்மன் படைத் தலைவர். பிரான்ஸ், போலந்து, டன்கிர்க், பல்ஜ் போர்களில் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். உக்ரைன் பகுதியில் நகரும்போது தனது படையை பின்வாங்க வேண்டி வந்தது. ஆனால் ஹிட்லர் மறுக்கவே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது. இதனால் இவருக்குப் பதிலாக குளுஜ் என்பவரை ஹிட்லர் நியமித்தார். பிறகு, மாடல் என்பவரை நியமித்தார். ஆனால் ருன்ஸ்டெட் திட்டம் சரி என்பதை பிறகு ஹிட்லர் உணர்ந்தார். போர் முடிவுக்கு முன்பே இவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

ஸ்பியர் (1905 - 1981):

ஜெர்மனியின் தளவாட உற்பத்தி அமைச்சர். ஹிட்லருக்கு நெருக்கமானவர். கட்டடக்கலை நிபுணர். நேசப்படைகளின் குண்டு வீச்சையும் பொருட்படுத்தாமல் தளவாட உற்பத்தியை அதிகரிக்கச் செய்தார். ஜெர்மனி தோல்வியைத் தழுவும் நிலையில் ஆயுத உற்பத்தி மையங்களை அழித்துவிட ஹிட்லர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இவர் அதை செய்யவில்லை. போருக்குப் பிறகு நியூ ரெம் பெர்க் விசாரணையில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். சிறையிலிருக்கும் போது தனது அனுபவங்களை நூலாக எழுதினர்.

கெய்டல் (1882 - 1946):
ஜெர்மன் படைப் தளபதி. ஹிட்லர் இவரை நெருக்கமான வைத்திருந்ததற்கு ஒரு காரணம் உண்டு. ஏன் என்று கேள்வி எழுப்பாமல் ஹிட்லரின் கட்டளையை அப்படியே நிறைவேற்றுவார். போருக்குப் பிறகு நியூரேம்பெர்க் விசாரணையில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

ஸ்டாபென்பெர்க் (1907 - 1944):

ஜெர்மன் ராணுவ அதிகாரி. போலந்து, பிரான்ஸ், வட ஆப்ரிக்கப் பகுதிகளில் தீவிரமாகப் போர்புரிந்தவர். பாலைவனப் பகுதியில் விமானக் குண்டு வீச்சுக்கு இலக்காகி காயம் பட்டவர். ஜெர்மன் மீது மிகுந்த பற்று கொண்டவர். ஜெர்மனியை ஹிட்லர் தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார் என்று கருதி அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியவர். கூட்டம் நடைபெறும் அறையில் கைப்பெட்டியில் வெடிகுண்டை வைத்துவிட்டு தப்பிக் சென்றார். ஆனால் அந்த விபத்திலிருந்து ஹிட்லர் தப்பி விட்டார். சதிக்கு ராணுவ தளபதிகள் சிலரும் உடந்தையாக இருந்தனர். சதி நிறைவேறாததால் சதிக்கு உடந்தையாக இருந்தவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரிப்பன்ட்ராப் (1893 - 1946):
ஹிட்லரின் வெளியுறவு அமைச்சர். ஜெர்மன்-சோவியத் ஒப்பந்தத்தை உருவாக்கியவர். ஹிட்லரின் போலந்து படையெடுப்பு பற்றி எச்சரிக்கைச் செய்து, அப்போர் தேவையில்லாமல் பிரிட்டனை போரில் இழுத்து விடும் என்று கணித்தார். இதற்காக சோவியத் வெளியுறவு செயலாளர் மாலோடோவ் என்பவருடன் உடன்படிக்கை ஏற்ப்படுத்திக் கொண்டார். பெர்லின் வீழ்ச்சிக்குப் பிறகு தலைமறைவாகி விட்டார். ஆனால் நேசப்படைகளால் பிடிபட்டு நியூரெம்பெர்க் விசாரணையைத் தொடர்ந்து தூக்கிலிடப்பட்டார்.

ரோமல் (1891 - 1944):
ஜெர்மன் கமாண்டர். முதல் உலகப்போரிலேயே தனது திறமையை நிரூபித்தவர். தரைப்படை உத்திகளைப் பற்றி நூல் எழுதியுள்ளார். பிரான்ஸ், மால்டா, எல் அலமெய்ன், துனிசியா ஆகிய பகுதிகளில், குறிப்பாக, பாலைவனப் பகுதிகளில் டாங்கிப் படையை திறமையாகக் கொண்டு சென்றுள்ளார். ஆப்ரிக்கத் துருப்புகளையும் வழிநடத்தியுள்ளார். ஹிட்லரை கொல்ல நடந்த சதியில் தொடர்புபடுத்தப்பட்டு தற்கொலை செய்துகொள்ள தூண்டப்பட்டார்.



நன்றி : திரு. சுப்பிரமணியம் சந்திரன், 'இரண்டாம் உலகப் போர்' புத்தகம்.



(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


14 கருத்துகள்:

  1. பெயரில்லா05 ஆகஸ்ட், 2011 08:27

    போர்க் குற்றவாளிகள் தூக்கிலடப்பட்டது மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  2. //நாஜிக் காட்சியை தொடங்கி 1933 -இல் ஆட்சியைப் பிடித்தவர். //

    அடால்ப் ஹிட்லர் நாஜிக்கட்சியைத் துவக்கவில்லை. நாஜிக்கட்சி ஏற்கனவே 1896 ஆம் ஆண்டே துவக்கப்பட்டது. அதன் தலைவர்களாக பலர் இருந்தனர். அதன் பின் தான் ஹிட்லர் அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தலைமைப் பதவிக்கு வந்தார்.

    உண்மையில் நாஜிக் கட்சியை வேவுப் பார்க்க அப்போதைய ஜெர்மன் அரசால், வேவுப் பார்க்கும் பணிக்காக அனுப்பபட்டவர் ஹிட்லர்.

    வேவுப் பார்க்கும் வேளையில், நாஜிக் கட்சியாளர்களின் கருத்துக்களால் கவரப்பட்டு நாஜிக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு நாஜிக்கட்சியை அரசமைக்கும் அளவுக்கு வளர்த்தவர்.....ஹிட்லரின் தொகுப்புக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இராணுவத்துக்குள் விசுவாசிகளும் விசுவாசிகளாய் இருந்தவர்கள் துரோகிகளாகவும் மாறிவிடுவார்கள்..
    அவர்களை கண்டறிவதே மிக கடினம்...
    இவர்கள் பலர் துரோகிகளாய் இருந்து தண்டனை பெற்றார்கள்...
    அது சந்தோசமான விடயம்...நம்ம துரோகி கருணாவை என்ன செய்ய?
    ஹிட்லர். ஒரு சர்வதிகாரி ..
    ஆனால் அவருடைய படை வழிநடத்தல் எனக்கு பிடித்திருந்தது..


    நல்ல பதிவு..
    பகிர்வுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
    முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
    பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

    பதிலளிநீக்கு
  6. //பெயரில்லா சொன்னது…
    போர்க் குற்றவாளிகள் தூக்கிலடப்பட்டது மகிழ்ச்சி//


    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //நம்பி சொன்னது…

    அடால்ப் ஹிட்லர் நாஜிக்கட்சியைத் துவக்கவில்லை. நாஜிக்கட்சி ஏற்கனவே 1896 ஆம் ஆண்டே துவக்கப்பட்டது. அதன் தலைவர்களாக பலர் இருந்தனர். அதன் பின் தான் ஹிட்லர் அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தலைமைப் பதவிக்கு வந்தார்.

    உண்மையில் நாஜிக் கட்சியை வேவுப் பார்க்க அப்போதைய ஜெர்மன் அரசால், வேவுப் பார்க்கும் பணிக்காக அனுப்பபட்டவர் ஹிட்லர்.

    வேவுப் பார்க்கும் வேளையில், நாஜிக் கட்சியாளர்களின் கருத்துக்களால் கவரப்பட்டு நாஜிக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு நாஜிக்கட்சியை அரசமைக்கும் அளவுக்கு வளர்த்தவர்.....ஹிட்லரின் தொகுப்புக்கு நன்றி!//


    தகவலுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. //இராஜராஜேஸ்வரி சொன்னது…
    பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.//


    இராஜராஜேஸ்வரியின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. //vidivelli சொன்னது…
    இராணுவத்துக்குள் விசுவாசிகளும் விசுவாசிகளாய் இருந்தவர்கள் துரோகிகளாகவும் மாறிவிடுவார்கள்..
    அவர்களை கண்டறிவதே மிக கடினம்...
    இவர்கள் பலர் துரோகிகளாய் இருந்து தண்டனை பெற்றார்கள்...
    அது சந்தோசமான விடயம்...நம்ம துரோகி கருணாவை என்ன செய்ய?
    ஹிட்லர். ஒரு சர்வதிகாரி ..
    ஆனால் அவருடைய படை வழிநடத்தல் எனக்கு பிடித்திருந்தது..


    நல்ல பதிவு..
    பகிர்வுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..//


    நண்பர் விடிவெள்ளியின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //அம்பாளடியாள் சொன்னது… 5
    வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
    முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
    பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....//

    பதிவர் அம்பாளடியாளின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு..
    பகிர்வுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..//

    பதிலளிநீக்கு
  12. நன்றி மிகவும் அருமை. ஹிட்லரை பற்றி மட்டுமே தெரியும்.
    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு