செவ்வாய், ஜூலை 21, 2015

தெலுங்கு நடிகர் 'பவர் ஸ்டார்' பவன் கல்யான் - ஒரு பார்வை

கிட்டத்தட்ட 11 வருடங்கள். வெற்றிப் படம் என்று சொல்லிக்கொள்ளும்படி ஒரு படம் கூட அமையவில்லை இவருக்கு. மற்ற நடிகர்களின் படங்கள் எல்லாம் வெற்றி, தோல்வி என்று சரிவிகிதத்தில் ஓடிக்கொண்டிருக்க, ஆனால் இவர் படங்கள் மட்டும் ஒன்று கூட பெரிய வெற்றியை அடையவில்லை. ஆனாலும் இவரின் படங்கள்
வெளிவருகிறதேன்றால், மற்ற நடிகர்களின் படங்கள் மெதுவாக பின்வாங்கிவிடும். காரணம், இவர் படங்களுக்கு மட்டும் இருக்கும் அந்த பிரம்மாண்ட மாஸ் Opening. ஆனால் அதே போல அந்த 11 வருடங்கள் கழித்து வந்த ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க, அதுவரை வெளிவந்த அத்தனை தெலுங்கு படங்களின் வசூல் ரெக்கார்ட்களை உடைத்தெறிந்தது இவரின் படம். அது தான் இவரின் பலம். இவர் ரசிகர்களின் பலம். அந்த பலத்தை 'Pawanism' என்று பொதுவாக சொல்லுவார்கள் ஆந்திராவில். Yes. நாம் இப்போது பார்க்கப்போவது 'பவர் ஸ்டார்' பவன் கல்யானை பற்றி.

பவனின் இயற் பெயர் கொனிடெலா கல்யாண் பாபு. இவர் ஆந்திராவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் தம்பி. இவர் 'Martial Arts' எனப்படும் தற்காப்புக் கலையான கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியவர். அதே போல 'பவண்' என்பதும் இவருக்கு வழங்கப்பட்ட பட்டம் தான். பின்னாளில் இதையே தன் பெயராக மாற்றிக்கொண்டார் இவர். இவரின் முதல் படம் அக்கட அம்மாயி, இக்கட அப்பாயி. வெளியான ஆண்டு, 1996. பவனின் முதல் படமே ஹிட்டடிக்க, இவரின் கலைப் பயணம் தொடங்கியது. அடுத்த படம் தமிழில் கார்த்திக், சுவலட்சுமி நடித்து வெற்றி பெற்ற கோகுலத்தில் சீதை படத்தின் ரீமேக்கில் நடித்தார். படத்தின் பெயர், 'கோகுலம்லோ சீதா'. படமும் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்திலிருந்து தான் கல்யாண் என்ற பெயரை 'பவண் கல்யாண்' என்று மாற்றிக் கொண்டார். அடுத்து அவர் நடித்த மூன்றாவது படமும், ஒரு தமிழ் ரீமேக் தான். இளைய தளபதி விஜய் நடித்து வெற்றி பெற்ற 'லவ் டுடே' என்ற படம் தான் சுஸ்வாகதம்' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. படமும் 175 நாட்கள் ஓடி பவனை முன்னணி நடிகர்கள் வரிசையில் நிறுத்தியது.
அடுத்து வெளியான படம் தான் பவனின் திரையுலக வாழ்க்கையில் Bench Mark Movie என்று சொல்லப்படும் விதமாக அமைந்தது. அது தான் 'தொலி பிரேமா'. இந்த படம் கிட்டத்தட்ட ஆந்திராவில் ஒரு வருடம் ஓடிய சூப்பர் டூப்பர் ஹிட் படம். அதே போல 'சிறந்த படம்' என்று இந்திய தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. ஆந்திராவில் 6 நந்தி விருதுகளையும் வென்றது. தமிழில் கூட 'ஆனந்த மழை' என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. அடுத்து வெளிவந்த படம் 'தம்புடு'. இந்த படம், ஹிந்தி நடிகர் அமீர் கான் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இது தான் தமிழில் விஜய் நடித்து வெளியான 'பத்ரி' திரைப்படம். பவனின் அடுத்த படம் 'பத்ரி'. இந்த படம் தான், ஆந்திராவின் முன்னணி இயக்குனர் என்று சொல்லப்படும் பூரி ஜெகன்னாத்தின் முதல் படம். இந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்தது. பத்ரிக்கு பிறகு வெளிவந்த படம் தான் 'குஷி'. எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த குஷி படத்தின் வெற்றியை பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. 175 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது படம். அடுத்து வெளிவந்த படம் தான், பவனின் இயக்கத்தில் வெளிவந்த ஜானி. இந்த படத்தில் இருந்து தான் பவன் கல்யாணின் திரையுலக வாழ்க்கையில் இறங்கு முகம் ஆரம்பித்தது.

பவன் கல்யாணின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படம் வெளியான ஆண்டு 2003. அடுத்து வெளிவந்த 'குடும்பா ஷங்கர்' படமும் வெற்றியடையாமல் போக, அடுத்த படமான பாலு ABCDEFG திரைப்படமும் பெரிதாக வெற்றியடையாமல் சுமாராக ஓடியது. பவனின் அடுத்த படமான 'பங்காரம்' மரண ப்ளாப் கொடுக்க, அதற்கடுத்து வெளிவந்த 'அன்னாவரம்' (திருப்பாச்சி ரீமேக்) என்ற படம் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பவனுக்கு கொடுத்தது. இதற்க்கு பின்பு வெளிவந்த 'ஜல்சா' திரைப்படம் பவனின் ரசிகர்களை திருப்திபடுத்தி, அந்த வருட ஹிட் படங்களின் வரிசையில் சேர்ந்துகொண்டது. அடுத்த படம் கிட்டத்தட்ட 2 வருட தயாரிப்பில், எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த 'கோமரம் புலி'. மிக பிரம்மாண்டமாக வெளியான இந்த படம், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அடுத்த படமான தீன் மார் படமும் பவன் ரசிகர்களை சற்று சோதிக்கவே செய்தது. அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில் வெளியான பஞ்சா என்ற படமும் பெரிதாக ஹிட்டடிக்காமல் போக, பவனுக்கு தன் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் ஒரு படம் தரவேண்டும் என்ற வெறி வந்தது. அந்த சமயத்தில் தான் ஹிந்தியில் சல்மான்கான் நடித்து ஹிட்டடித்த 'டபாங்' படத்தை பார்த்து ரீமேக் செய்தார். அந்த படம் தான் 'கப்பர் சிங்'.
பவனின் திரையுலக வாழ்க்கையை 'கப்பர் சிங் முன்பு, கப்பர் சிங் பின்பு' என்றே குறிப்பிடலாம். அப்படி ஒரு இமலாய வெற்றியை கொடுத்தது கப்பர் சிங். வெறும் 30 கோடியில் தயாரான படம், கிட்டத்தட்ட 130 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதுவரை தெலுங்கு சினிமாவின் ஆல் டைம் ரெக்கார்ட், எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'மகதீராவை' வசூலில் பின்னுக்கு தள்ளியது. கப்பர் சிங் படத்திற்கு பிறகு வெளிவந்த படம் 'கேமரா மேன் கங்காதோ ராம்பாபு'. டோலிவுட் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் பவனுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெற்றுத் தந்தது என்றாலும், பவனின் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு வருட  இடைவேளைக்கு பிறகு வெளிவந்த படம், அத்தாரிண்டிகி தாரேதி'. இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், சிறந்த Family Entertainer படமாக பெரிய வெற்றியை கண்டது. அடுத்த வெளியான 'கோபாலா கோபாலா' படமும் சுமாரான ஒரு வெற்றிப் படமே. ஆனாலும் அவரின் ரசிகர்கள் அவரின் அடுத்த படமான 'கப்பர் சிங் 2' படத்திற்காக Waiting.
நடிகர், திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஸ்டன்ட் அமைப்பாளர், நடன அமைப்பாளர், பாடகர் மற்றும் அரசியல்வாதி என்ற பன்முகம் கொண்ட பவன் கல்யாண் ஒரு Reserved Type என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதனால் தான் அவரை சினிமா விழாக்களில் அதிகம் காண முடியாது. 2008 இல் இவரின் அண்ணனான நடிகர் சிரஞ்சீவி 'பிரஜா ராஜ்ஜியம்' என்ற கட்சியை ஆரம்பித்தபோது, அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்து பட்டி தொட்டியெங்கும் கட்சியின் பெயரை தனது பிரசாரத்தின் மூலமாகவும், தனது ரசிகர்களின் மூலமாகவும் கொண்டு சென்றார் பவன் கல்யான். பின்பு பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியோடு சிரஞ்சீவி இணைத்த பிறகு, கடந்த ஆண்டு 'ஜன சேனா' என்ற கட்சியை பவன் கல்யான் தொடங்கினார். கடந்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ப.ஜ.க கட்சி, தெலுங்கு தேசம் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தார் கல்யான். தெலுங்கு தேசம் கட்சி இப்போது ஆட்சியில் இருப்பதற்கு பவனும் ஒரு முக்கியக் காரணம் என்பது மறுப்பதற்கில்லை.

 பவன் கல்யாணுக்கு இதுவரை மூன்று திருமணங்கள் நடந்துள்ளன. நந்தினி என்ற பெண்ணோடு நடந்த முதல் திருமணம் கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து விவாகரத்தில் முடிய, இரண்டாவதாக நடிகை ரேணு தேசாயுடன் Living Together ஆக வாழ்ந்து பிறகு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  கடந்த 2012 ரேணு தேசாயை விவாகரத்து செய்த பவன், Anna Lezhneva என்ற வெளிநாட்டு பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டார். என்ன தான் பவன் கல்யானை சர்ச்சைகள் சூழ்ந்தாலும், தோல்விகள் தொடர்ந்து வந்தாலும், என்றும் அவரை விட்டு விலகியதில்லை அவரின் வெறித்தனமான ரசிகர்கள். அது தான் பவர் ஸ்டாரின் பவன் கல்யாணின் ஸ்பெஷல் பவர் என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.




Thanks and Regards

1 கருத்து:

  1. அய்யா !வேற ஒன்னும் இல்லை! அவர் பிறந்த காப்பு என்ற சாதிஆந்திராவில் 35%மேல் மக்கள் தொகை கொண்டது !அந்த செல்வாக்கு தான்!அதை சிரஞ்சீவியும் இவரும் நன்றாக பயன் படுத்தி கொண்டார்கள்

    பதிலளிநீக்கு