வியாழன், ஏப்ரல் 17, 2014

மனதை கவர்ந்த சமிபத்திய 5 படங்கள்...

இந்த வருடம் தொடங்கியதிலிருந்தே பல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர் என்று இல்லாமல் புதுமுக இயக்குனர்கள் பலர் இந்த வருட ஆரம்பத்திலிருந்தே நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வருடம் நான் பெரிதாக எதிர்பார்த்த சில படங்கள், என்னை கடுப்பெற்றியதேன்னவோ உண்மை. அதே சமயம், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நான் பார்த்த சில படங்கள், என்னை வெகுவாக கவர்ந்ததும் உண்மை. அந்த படங்களை தனித்தனியாக பதிவெழுதலாம் என்று ஆசை தான். ஆனால் நேரமின்மை காரணமாக 5 படங்களையும் இந்த ஒரே பதிவில் எழுதுகிறேன்.

கோலி சோடா:

கோயம்பேடு மார்க்கெட்டில் தினக் கூலி வேலை செய்யும் நான்கு 'பருவ வயது' சிறுவர்களின் கதை. அவர்களின் அன்றாட வாழ்க்கை, நட்பு, காதல், பகை, அவர்களுக்கான அடையாளத்திற்காக போராடும் வெறி என்று கமர்ஷியல் படத்திலேயே மிக அழகாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். அவரது முந்தைய படமான 'அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது' கூட நல்ல படம் தான். என்ன காரணமோ, தெரியவில்லை. ரசிகர்கள் மத்தியில் அந்தப் படம் எடுபடாமல் போய் விட்டது. ஆனால் இந்த படத்தில் அவர் ஒரு இயக்குனராக ஜெயித்து விட்டார் என்றே சொல்லலாம். 'பசங்க' படத்தில் நடித்த அந்த நான்கு சிறுவர்கள், இன்று இந்த படத்தின் ஹீரோக்கள். சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள் அனைவரும். படத்தில் எனக்கு மிகவும் கவர்ந்தது, வசனங்கள். இயக்குனர் பாண்டிராஜ் மிக அழகாகவும், நெத்தியடியாகவும் வசனங்களை எழுதியிருக்கிறார். வித்தியாசமான படங்களை தயாரிக்கும் லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' கம்பெனியின் படம்.

என்னுடைய மார்க்: 50/100

பண்ணையாரும் பத்மினியும்:
இந்த படம், முதலில் குறும்படமாக வந்து, பிறகு திரைப்படமாக உருவெடுத்தது. இப்போதைய 'நம்பிக்கை நடிகர்' விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்திருந்தாலும், எனக்கென்னவோ படத்தில் என்னை அதிகமாக கவர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ், துளசி & அந்த பத்மினி காரில் ஏற ஏக்கத்தோடு காத்திருக்கும் சிறுவன். குறிப்பாக ஜெயப்ரகாஷுக்கும் துளசிக்கும் இடையே நடக்கும் அந்த செல்ல சண்டைகளும், வயோதிக காதல் காட்சிகளும் க்ளாசிக். அதே போல விஜய் சேதுபதியும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். 'உனக்காக பிறந்தேனே எனதழகா' பாடல் என் Favorite. சத்தியமாக இது கமர்ஷியல் படம் கிடையாது. இது ஒரு கிளாசிக் மூவி. ரொம்ப நாளைக்கு பிறகு என் மனதை இலகுவாக உணர்த்திய படம் என்றே சொல்லலாம். அதே சமயம், படத்தில் குறைகளும் இருக்கின்றன. ஊரே பத்மினி காருக்காக ஏங்குவதும், பண்ணையாரின் மகள் ஏதோ 'கொள்ளைக்காரி' போல சித்தரிக்கப்பட்டிருப்பதும் அபத்தமாக இருந்தது. மற்றபடி படம், சூப்பர்.

என்னுடைய மார்க்: 75/100

தெகிடி:
ரொம்ப நாள் கழித்து, தமிழில் ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம். எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவல் ஒன்றை படித்தது போன்ற உணர்வை தந்தது இந்த படம். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தெளிவான திரைக்கதையோடு பார்வையாளனுக்கு, இயக்குனர் Ramesh படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை. படத்தில் நடித்த நடிகர்கள் சொற்பமே என்றாலும், நடித்த அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். எனக்கு படத்தில் ஹீரோவாக நடித்த அசோக் செல்வனை விட, படத்தின் நாயகி ஜனனி ஐயர் ஒரு படி மேலே கவர்கிறார். காந்த கண்ணழகி அவர். இது போல துப்பறியும் கதைகளம் கொண்ட படங்கள் அதிகம் வந்தால் நன்றாக இருக்கும். படத்தின் குறையென்று பார்த்தால், இயக்குனர் என்னைப் போன்ற 'ராஜேஷ்குமார் நாவல்கள்' அதிகம் படிக்கிறவர்களையும் தன் திரைக்கதையால் ஏமாற்ற வேண்டும். Because, படத்தின் முக்கிய வில்லன் யாரென்பதை படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே அனுமானித்து விட்டேன். அதற்க்கு அப்பறமும் ஒரு முகம் தெரியாத வில்லனை பார்வையாளனுக்கு அறிமுகப்படுத்தும் போதுதான் இயக்குனரின் திறமை புரிகிறது.

என்னுடைய மார்க்: 70/100

குக்கூ:
கண் தெரியாத ஜோடி, அவர்களின் காதல், அந்த காதலினால் வரும் பிரச்சனை. இவை தான் குக்கூ படத்தின் கதை. இந்த கதைக்கு அறிமுக இயக்குனர் ராஜு முருகன் கனமான திரைக்கதையை கொடுத்திருக்கிறார். தமிழ் என்ற கதாபாத்திரத்தில் 'அட்டகத்தி' தினேஷ். நல்ல நடிப்பு. இதே போன்ற வித்தியாசமான கதைகளிலும். சவாலான வேடங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்தால், தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை அடையலாம். சுதந்திரக்கொடியாக மாளவிகா நாயர். அருமையான நடிப்பு. குறிப்பாக அந்த ஹோட்டலில் சாப்பிடப் போகும் காட்சி ஒன்று போதும், இவரின் நடிப்பை விவரிக்க. அழகும், நடிப்பும் கலந்த நடிகை என்று இந்த படத்தில் இவர் பெயர் வாங்கினாலும், நம்மாட்கள் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு தருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். படத்தில் குறையென்று பார்த்தால், கிளைமாக்ஸ். நிறைய தடவை நம் தமிழ் சினிமாவில் இது போன்ற காட்சிகளை பார்த்துவிட்டதால், மறுபடியும் இதே போன்ற சீன்களை பார்கிறபோது எரிச்சலாகிறது. மற்றபடி படம், அருமை.

என்னுடைய மார்க்: 80/100

நெடுஞ்சாலை:
இது கண்டிப்பாக ஒரு Different Genre திரைப்படம் தான். 'சில்லுன்னு ஒரு காதல்' இயக்குனர் கிருஷ்ணாவின் இரண்டாவது படம். கதைகளம், கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகள் எல்லாமே புதுசாகவும், நன்றாகவும் இருந்தது. என்பது, தொன்னூறுகளில் நடந்த லாரி கொள்ளையை வைத்து பின்னப்பட்ட கதையில் காதல், காமெடி, ஆக்ஷன் என்று கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர். 'தார்ப்பாய்' முருகனாக ஆரி. பல ஆங்கிள்களில் 'பருத்திவீரன்' கார்த்தியை ஞாபகப்படுத்துகிறார். நடிப்பிலும் தான். மங்காவாக புதுமுகம் சிவாதா, நல்ல நடிப்பு. கேரளப் பெண்ணின் அழகும் அருமை. தம்பி ராமையா போன்ற நடிகர் படத்தில் இருந்தும் நகைச்சுவையில் வறட்சி இருக்கிறது. படத்தின் வில்லனை படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சிக்கு முன்புவரை பெரிதாக காட்டி விட்டு திடீரென்று அவரை பொட்டென்று அடித்துக் கொல்லும்போது சப்பென்று ஆகி விடுகிறது. இருந்தாலும் படத்தை ரசிக்கும்படி எடுத்திருக்கிறார் கிருஷ்ணா.

என்னுடைய மார்க்: 65/100



Thanks & Regards

3 கருத்துகள்:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பர்களே
    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    பதிலளிநீக்கு