செவ்வாய், ஜூன் 14, 2011

உகாண்டாவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் - சுவாமி தரிசனம்



பதிவு போட ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரைக்கும் சீரியல் கொலைகாரர்கள், Necrophilia மற்றும் புதுசாக ஆவிகள் தொடர் என்று ஒரே 'ரத்தத்தின் ரத்தமாக' பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரே ஆறுதல் என்னவென்றால் பழைய படங்களின் திரை விமர்சனங்கள் தான். எனக்கே என் ப்ளோக்கை திறக்க கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. சரி என்ன பண்ணலாம்? என்று
யோசித்துக்கொண்டிருந்தபோது அண்ணன் 'நல்ல நேரம்' ஆர்.கே. சதிஷ்குமார் அவர்கள் 'திருப்பதி கோவில் ரகசியங்கள்' என்ற ஒரு பதிவு எழுதியிருந்தார். சரி அப்ப நீங்களும் திருப்பதி பாலாஜி கோயிலை பற்றி எழுதுறிங்களா? என்று நினைக்காதிங்க. இது திருப்பதியில் இருக்கிற வெங்கடாசலபதி கோயிலை பற்றி எழுதல. உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் புதுசாக திருப்பதி தேவஸ்தானம் மூலமாகவும், இங்க இருக்குற Indian Association மூலமாகவும் இந்த கோவிலை கட்டியிருக்காங்க. வாங்க, மேற்கொண்டு 'உகாண்டா' பெருமாளை தரிசனம் பண்ணலாம்.
இந்த கோவிலை கடந்த மூணு வருஷமா கட்டிகிட்டிருந்தாங்க. சமிபத்துல தான் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிஞ்சிது. தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த கோவிலுக்கு பூஜை பண்ணிகிட்டிருந்தாங்க. நான் போனது கடைசி நாள் பூஜையான ஞாயற்றுகிழமையில தான். இந்த கோவிலை பார்த்தபோது, எனக்கு நம்ம தமிழ்நாட்டு கோவிலை பார்த்த சந்தோஷத்தை இந்த கோவிலோட தோற்றம் கொடுத்தது. பொதுவாகவே இங்கெல்லாம் மார்வாடிகள் அவங்களுக்கேத்த மாதிரியே கோவில் கட்டுவாங்க. அந்த கோவிலை பார்த்த எனக்கு பெருசா ஒன்னும் பக்தி வரல. என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு கோவில் மாதிரி வருமா? சரி, இப்ப விஷயத்துக்கு வரலாம். இந்த கோவிலை ஒரு மலையில அமைச்சிருக்காங்க. தலைநகர் கம்பாலாவில் இருந்து 20 கிலோமீட்டர் வந்தா இந்த கோவிலை பார்க்கலாம். என்டேபி விமானநிலையத்திலிருந்து வந்தாலும் அதே 20 கிலோமீட்டர் தான். கோவிலோட கோபுரம் அழகான வேலைப்பாடுகளோட அருமையா அமைச்சிருக்காங்க.
கோவிலோட பிரகாரம் ரொம்ப விசாலமா இருந்தது. வழக்கம் போலவே இடதுபுறத்துல பத்மாவதியும், வலதுபுறத்துல ஆண்டாலும் அவங்கவங்க மண்டபத்துல காட்சி தந்துகிட்டு இருந்தாங்க. மெயின் மண்டபம் தான் நம்ம 'வெங்கி' இருக்குறது. பெருமாளோட தரிசன கூடத்துல இடது புறம், வலதுபுறம் சேர்த்து தசாவதார சிலைகள் இருந்தது. ஆனா அதுல ஒரு சின்ன Mistake. பலராமர் சிலைக்கு பதிலா புத்தர் சிலை இருந்தது. விசாரிச்சப்போ தவறுதலா சிலையை செஞ்சிட்டாங்கன்னு சொன்னாங்க. உள்ள மூல ஸ்தானத்துல இருந்த பெருமாள் சிலை, நம்ம ஊர் பழனியில இருந்து ஸ்பெஷல் ஆர்டர் செஞ்சி வந்ததாம். மற்ற சிலைகள் எல்லாம் ஆந்திர மாநிலத்துல இருக்குற கடப்பாவிலிருந்து கொண்டு வந்தாங்களாம். அந்த கோவிலோட மொத்த Painting வேலைகளையும் செஞ்சது ஒரு தஞ்சாவூர்காரர். நல்லா அருமையா செஞ்சிருக்காரு.
நான் போன அன்னைக்கு ப்ரீ சாப்பாடும் இருந்தது. சாப்பாடும் திருப்பதி பிரசாதம் மாதிரி அருமையா இருந்தது. திருப்பதி தேவஸ்தானம் மூலமா ரெண்டு அர்ச்சகர்கள் வந்திருந்தார்கள். அவங்க தான் அன்னைக்கு அந்த சாப்பாடு எல்லாம் செஞ்சது. அது மட்டுமில்லாம திருப்பதி பிரதான ப்ரசாதமான வடையும், லட்டும் அன்னைக்கு இலவசமா கிடைச்சது.

கென்யா தலைநகர் நைரோபியில் கூட திருப்பதி பாலாஜி கோயில் இருக்குது. ஆனா அந்த கோவில் மார்வாடிகள் கட்டினது. அதனால அந்த கோவில் எனக்கு கொஞ்சம் அன்னியமாக தெரிஞ்சது.அதே சமயம் இந்த கோவில், மலை உச்சியில இருந்ததால அங்கிருந்து மொத்த ஊரையும் பார்க்கலாம். இந்த கம்பாலா தலைநகருக்கு இன்னொரு பெயரும் இருக்கு. Seven Hills of the city அப்படின்னு உகாண்டாவை சொல்லுவாங்க. இந்த கோவில்ல இருந்து பார்த்தா நைல் நதி, மலைகள்ன்னு ரம்யமான இயற்கை காட்சிகள் நிறைய இருக்கு. எப்படியோ, பொறுமையா சாமி தரிசனம் பண்ணிட்டு, நிறைவா வீட்டுக்கு வந்தேன். இனிமே உகாண்டாவுக்கு வர்றவங்க யாரும் நம்ம திருப்பதி வெங்கடாசலபதி கோவிலை பார்க்காம போய்டாதிங்க.





(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).





என்றும் அன்புடன்


3 கருத்துகள்:

  1. கோவில் மாதிரியே உங்க பதிவும் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. இடி அமீனோட ஊர்ல பெருமாள் கோவிலா...!!! நல்ல மாற்றம் தான்!!

    பதிலளிநீக்கு
  3. y bro this kolaivery tooooooooooooooooooooo much lei and fake nd am also in uganda am also knw very wel abo Amien dnt write like this creiating storeys plsss nd u knw ameein did soooooo maney gd thing to uganda why u cant writ that and he did some mistkes but not like this in ur articale pls stop like this posts

    பதிலளிநீக்கு