ஞாயிறு, ஏப்ரல் 19, 2015

காஞ்சனா 2 - திரை விமர்சனம்...

2007 இல் 'முனி' வெளி வந்திருந்தபோது கண்டிப்பாக அதன் தொடர்ச்சியாக, தொடர்ந்து நாம் எடுக்க வேண்டிவரும் என்று ராகவா லாரன்ஸ் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். வெறும் ஏழு வருடத்திற்குள் 3 பாகங்கள். அதுவும் 2011 அன்று வெளிவந்த 'காஞ்சனா' அதிரி புதிரி ஹிட். அந்த படத்தின் எதிர்ப்பார்ப்போடு வெளிவந்திருக்கும் படம் தான் இந்த 'காஞ்சனா 2'. முந்தைய 'காஞ்சனா' போலவே இந்த படமும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.


படத்தின் கதை என்று புதுசாக ஒன்றும் இல்லை. முந்தைய 'முனி' படங்களின் அதே Template காட்சிகள் தான் இந்த படத்திலும் தொடர்கிறது. படத்தின் ஆரம்ப காட்சியில் பேய் பற்றிய Intro, ராகவாவின் பயத்தோடு கலந்த காமெடி காட்சிகள், ஹீரோயினுக்கும் ஹீரோவுக்குமான காதல், அதை தொடர்ந்து பேய் இருக்கும் இடத்திற்கு போய், பேயை கையோடு அழைத்து வரும் லாரன்ஸ், பின்பு பேய் ராகவாவை பிடித்துக் கொள்வது, இது தெரிந்து ராகவாவின் குடும்பத்தினர் பேயை விரட்ட சாமியாரின் உதவியை நாடுவது, சாமியார் பேயை பற்றி விசாரிக்கும்போது பேய் தன்னுடைய Flash Back ஐ சொல்லி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்க Permission கேட்பது, அதற்க்கு ராகவா மனமிறங்கி பேயை அவர் தன் உடம்பில் ஏற அனுமதிக்க, அந்த பேய் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனை பழிவாங்கி, கடைசியில் சுபம் போடுவதற்கு பதிலாக முனியின் அடுத்த பாகம் தொடரும் என்று படத்தை முடிப்பார்கள். இது அப்படியே இந்த படத்திலும் தொடர்ந்திருக்கிறது. ஆனால் சில காட்சிகள் மட்டும் கொஞ்சம் மாற்றப்பட்டிருக்கிறது.



ராகவா லாரன்ஸின் Performance படத்தில் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. வழக்கம் போல பேய்க்கு பயப்படும் காட்சி, டான்ஸ், பேய் வந்தபின் உருமாறிய மிரட்டலான நடிப்பு என்று அதகளப்படுத்துகிறார் லாரன்ஸ். Wow, டாப்சியா இது? என்ன நடிப்பு டா சாமி? பேய் வந்த பிறகு அவர் பண்ணும் Performance, Simply Awesome. அதே போல பிளாஷ் பேக் காட்சியில் மாற்றுத் திறனாளியாக வரும் நித்யா மேனனின் நடிப்பும் அருமை. வழக்கம் போல கோவை சரளா காமெடி காட்சியில் கலக்கியிருக்கிறார். நிறைய காமெடி கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தும், காமெடியில் பஞ்சம் தெரிகிறது. குறிப்பாக மயில்சாமி, மனோபாலா, சாம்ஸ் போன்றவர்களோடு ராகவா செய்யும் 'Adult ஒன்லி' காமெடி எல்லாம் கண்டிப்பாக குடும்பத்தோடு படம் பார்ப்பவர்களை நெளிய வைக்கும். அதே போல அம்மாவை 'போடி வாடி, செருப்பால அடிப்பேன்' போன்ற வசனங்களை குழந்தைகளுக்காகவாவது தவிர்த்திருக்கலாம். மற்றபடி படத்தில் நடித்த மற்ற நடிகர்களான ஜெயப்ரகாஷ், ஸ்ரீமன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ரேணுகா போன்றவர்கள் தங்களுக்கு கிடைத்த வேடங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். என்ன, தேவதர்ஷினி இருந்திருந்தால் இன்னும் படத்தின் காட்சிகள் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.



ராஜவேலின் கேமரா படத்தில் மிக அழகாக பயன்பட்டிருக்கிறது. ஒரு பேய் படத்திற்கு தேவையான Visual த்ரில்லை படத்திற்கு பக்காவாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜவேல். இந்த படத்தில் மொத்தம் நான்கு இசையமைப்பாளர்கள். ஆனால் எனக்கு 'வாடா என் வீரா'  மற்றும் 'மொட மொடவென' பாடலும் ரொம்ப பிடித்த பாடல்கள். படத்தை இயக்கி தயாரித்தது ராகவா லாரன்ஸ். படத்தில் குறையென்று பார்த்தால், படத்தின் கடைசி அரைமணி நேரம், ரொம்பவே நீளம். அதே போல கிளைமாக்ஸ் காட்சிகள், ரொம்பவே சோர்வை வரவழைத்து விட்டது. அதுவும் எந்த ஊரில் பேய் தனக்கு பிடித்த சாமிக்கு பூஜை போடமுடியுமோ, அந்த ராகவேந்திர சுவாமிக்கே வெளிச்சம். கண்டிப்பாக படம் காஞ்சனா அளவிற்கு இல்லை தான். ஆனால் கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம். லாரன்ஸ் சார், முனி அடுத்த பாகத்தில் இதை விட, ரொம்ப அதிகமாவே எதிர்பார்க்கறோம்...




Thanks and Regards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக