திங்கள், ஆகஸ்ட் 06, 2012

சரித்திர துணுக்கு செய்திகள் 30...

 1). உலகம் 1900 -ஆம் ஆண்டுக்குள் அடி எடுத்து வைத்தது! அப்போதே அச்சு இயந்திரத்துக்கு வயது 400 என்பதால், அவை உலகின் பெரிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டன! புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கணிசமான அளவுக்கு மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தது! ரயில் போக்குவரத்தும்
புழக்கத்துக்கு வந்துவிட்டது. மோட்டார் கார்கள்கூட வீதிகளுக்கு வந்துவிட்டன என்றாலும், உலகின் பெரும்பாலான நாடுகளில் குதிரை வண்டிகளும் மாட்டுவண்டிகளுமே வீதிகளில் தென்பட்டன! ரேடியோ, டி.வி. என்று எல்லாமே ஆராய்ச்சி கட்டத்திலேயே இருந்ததால், மக்களுக்கு நாடகத்தையும் இசையையும் விட்டால் வேறு பொழுதுபோக்கு கிடையாது!

2). ஏன் இந்த கனவு?
1900 -ஆம் ஆண்டு, ஆஸ்திரியாவை சேர்ந்த சிக்மண்ட் ப்ராய்டு என்ற மனோதத்துவ நிபுணரின் கண்டுபிடிப்பு, தூக்கத்தில் தோன்றும் கனவுகள் பற்றி மனிதனுக்கு இருந்த பல சந்தேகங்களுக்கு விடை சொன்னது! மூட நம்பிக்கைகளுக்கும் தேவையில்லாத பயத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. 'மனிதனின் ஆசை அல்லது பயம் - இவைதான் அவன் தூங்கும்போது கனவாக வெளிப்படுகிறது' என்பது இவரின் கண்டுபிடிப்பு. இதுதான் மனோதத்துவ இயல் பற்றி பிறகு எழுதபடவிருந்த அத்தனை உண்மைகளுக்கும் முன்னுரை... அடிப்படை.. ஆணிவேர்.. எல்லாம்!

3). 1901 -ஆம் ஆண்டு, பார்சலோனாவைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன், முதன் முதலாக தான் வரைந்த ஓவியங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்தான். 'என்ன கண்றாவி இது?' என்று பலர் முகம் சுளித்தார்கள். சுலபத்தில் புரியாத ஆந்த ஓவியங்களை வரைந்த இளைஞனின் பெயர் - பிக்காஸோ!

4). 1901 -ஆம் ஆண்டு, சூரியனே அஸ்தமிக்காத அந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணி ஜனவரி 22 -ஆம் தேதி தனது கடற்கரை மாளிகையில் அஸ்தமித்தார். 64 ஆண்டுகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணியாக இருந்த விக்டோரியாவுக்கு ஒன்பது குழந்தைகள். இதில் பலர் ஐரோப்பாவில் உள்ள பல ராஜகுடும்பங்களின் வாரிசுகளுடன் மணம் முடித்துக் கொண்டதால், மகாராணி 'ஐரோப்பாவின் பாட்டி' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

5). 1903 -ஆம் ஆண்டு, வானத்தில் பறக்கவேண்டும் என்ற மனிதனின் ஆயிரம் ஆண்டுக் கனவு இந்த ஆண்டுதான் நிறைவேறியது! சைக்கிள் தயாரிப்பில் அனுபவமுள்ள ரைட் சகோதரர்கள் வடிவமைத்த முதல் விமானம் ஆகாயத்தில் பறந்தது.
6). 1903 -ஆம் ஆண்டு, தங்களின் நிலத்திலிருந்து தானியங்களை ரயில்நிலையம் வரை கொண்டு போக ஒரு வாகனம் தேவைப்பட்ட காலம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, ஹென்றி போர்டு ஒரு மோட்டார் வாகனத் தொழிற்சாலையை அமெரிக்காவின் டெட்டராய்ட் நகரில் நிறுவினார். இந்த Ford தான், இப்போது நமது சென்னை - மறைமலைநகர் வரை பரவியிருக்கிறது!

7). 1903 -ஆம் ஆண்டு, 'கதிர்வீச்சு' (Radium) பற்றிய கண்டுபிடிப்புக்காக மேடம் க்யூரியும் அவரின் கணவரும் நோபல் பரிசு பெற்றார்கள். ஆராய்ச்சிக்காக இரவு பகலாக உழைத்ததால், பரிசு கொடுக்கப்பட்ட நாளன்று அவர்களால் அதை நேரில்கூடப் போய் வாங்க முடியவில்லை. ஆனால், விஞ்ஞானத்தின் மீதிருந்த ஆசை க்யூரியை துரத்தியது. 1911 -ஆம் ஆண்டு ரசாயனத்துக்காக மேடம் க்யூரி இரண்டாவது முறையாக நோபல் பரிசு வாங்கினர்.

8). 1903 -ஆம் ஆண்டு, வெள்ளைக்காரர்கள் தங்கும் வசதி மிகுந்த ஓட்டல்களில் இந்தியர்களுக்கு அனுமதி கிடையாது. அதனால் இந்தியாவின் முதல் ஐந்து நட்சத்திர தாஜ் ஓட்டலை பம்பாயில் ஆரம்பித்த ஜெம்ஷட் ஜி டாடா இந்த ஆண்டில் மறைந்தார்.

 9). 1904 -ஆம் ஆண்டு, ஐரோப்பாவை தபால் கார்டு மேனியா பிடித்து ஆட்ட ஆரம்பித்தது! பேப்பரில் கடிதம் எழுதி அதை ஓர் உறையில் போட்டு அனுப்புவதை விட்டுவிட்டு பலர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போஸ்ட் கார்டுக்கு தாவினார்கள்.

10). 1904 -ஆம் ஆண்டு, மணி அடித்து அழைத்து உணவு போட்டுப் பழக்கப்பட்ட நாயின் நாக்கிலிருந்து எச்சிலை வரவழைக்க உணவு மணி அடித்தாலே போதும்.. நாயின் நாக்கில் தானாகவே எச்சில் சுரக்கும். அதுதான் Conditional Reflex என்று கண்டுபிடித்துச் சொன்ன ரஷ்யாவின் பாவ்லோவ் நோபல் பரிசு வென்றார்.
11). 1905 -ஆம் ஆண்டு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஊற்றுக்கண்களாக இருந்த வங்காள மக்களின் கண்களில் நீர் ஆறாக பெருகெடுத்தது! ஒரு தாயின் பிள்ளைகளைப் போல ஒற்றுமையாக இருந்த வங்காளத்தை பிரிட்டிஷ் அரசு இரண்டாக பிரிக்க... இந்து - முஸ்லிம் என்று இரு பிரிவினருமே ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதன் எதிரொலியாக, சுதேசி இயக்கம் பிறந்தது!

12). 1905 -ஆம் ஆண்டு, குட்டியுண்டு நாடான ஜப்பான், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை பறந்து கிடக்கும் ரஷ்யாவை யாருமே எதிர்பாராத வகையில் கடற்ப்போரில் தோற்கடித்தது! கடைசியில், கொரிய நாட்டின்மீது தனக்கிருந்த உரிமையை ரஷ்யா விலக்கிக் கொண்டது! ஜப்பானின் இந்த வெற்றி, ரஷ்யாவின் முப்பத்தைந்து கப்பல்களைக் கடலிலும் உலகத்தை ஆச்சிரியத்திலும் மூழ்கடித்தன.
  
13). 1906 -ஆம் ஆண்டு, 'முப்பது கோடி முகம் உடையாள்' என்று பாரதியார் எழுதுவதற்கு மூல புள்ளிவிவரமான Blue Book இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தின்படி அன்றிய தேதிக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்மீது நாற்பது கோடி பேர் இருந்தார்கள். அதில் முப்பது கோடி இந்தியாவில்!

14). 1907 -ஆம் ஆண்டு, விமானம் மாதிரி ஓடுதளம் எல்லாம் எதுவும் தேவைப்படாமல் செங்குத்தாக விண்ணில் எழுந்து பறக்கக்கூடிய ஒரு விமானம் பிரெஞ்சு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது! அது, ஹெலிகாப்டர்.

15). 1907 -ஆம் ஆண்டு, தென் ஆப்ரிக்க அரசு, அங்கே வாழும் இந்தியர்களை இரண்டாம்தரக் குடிமக்களுக்கும் கீழாக நடத்த ஆரம்பித்தது! 'இந்தியர்கள் அனைவரும் தங்களின் கைவிரல் ரேகைகளை அரசிடம் பதிவுசெய்ய வேண்டும். எங்கே சென்றாலும் அரசு கொடுத்திருக்கும் அடையாள பத்திரத்தை எடுத்து செல்ல வேண்டும்' என்றெல்லாம் சட்டம் கொண்டு வர.. அப்போது தென் ஆப்ரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்துவந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இந்த சட்டத்தை எதிர்த்தார். அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது!
16). 1908 -ஆம் ஆண்டு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் வருடங்களில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டி இந்த ஆண்டு லண்டனில் நடந்தது! இதில் மொத்தம் 21 விளையாட்டுகள் இருந்தன! இந்தப் போட்டியில் பெரும்பாலான மெடல்களை அள்ளியது அமெரிக்கா!

17). 1910 -ஆம் ஆண்டு, War and Peace போன்ற சாகாவரம் பெற்ற படைப்புகளை உருவாக்கிய ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இறந்தார். மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர், ரயில்வே நிலையத்தில் அனாதையாக இறந்தார்.

18). 1911 -ஆம் ஆண்டு, மணியாச்சி ரயில் நிலையசந்திப்பில் நெல்லை கலெக்டர் ஆஷ் துரை, வாஞ்சிநாதனால் சுட்டுகொல்லப்பட்டார். அடுத்த சில கணங்களில் வாஞ்சிநாதனும் தற்கொலை செய்து கொண்டார்.

19). 1912 -ஆம் ஆண்டு, பக்கெட், குடம் போன்ற எவர்சில்வர் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்படும் Stainless Steel அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு தயாரானது. இதை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர்... F.M. பக்கெட்.

20). 1913 -ஆம் ஆண்டு, தாதா சாகிப் பால்கே 'ராஜா ஹரிச்சந்திரா' படத்தை தயாரித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் இதுதான். '57,000 புகைப்படங்கள்... இரண்டு மைல் நீளத்துக்கு இருக்கும்... கட்டணம் 3 அணா' இப்படித்தான் இந்தப் படம் விளம்பரம் செய்யப்பட்டது.
21). 1914 -ஆம் ஆண்டு, யுத்தத்தால் சோர்ந்து போன பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு படைகளுக்கு சார்லி சாப்ளினின் 'Making a Living' என்ற படம் உற்சாக மூட்டியது! போர் வீரர்களுக்குக்கூட அரசே இந்தப் படத்தைத் திரும்பத் திரும்பத் திரையிட்டுக் காட்டியது.

22). 1917 -ஆம் ஆண்டு, ரஷ்யாவில் புரட்சி வெடித்த இதே ஆண்டில், 'புரட்சித் தலைவர்' என்று தனது கட்சியினரால் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர் பிறந்தார். சுமார் இருபது ஆண்டு காலம் இந்தியாவின் தலைஎழுத்தை தீர்மானித்த இந்திராகாந்தி & அமெரிக்க ஜனாதிபதி கென்னடியும் பிறந்தது இதே ஆண்டில் தான்.

23). 1919 -ஆம் ஆண்டு, சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்திய ரௌலட் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே திரண்டிருந்த இருபதாயிரம் பேரைக் கலைக்க, ஜெனரல் டயர் தலைமையிலான சிப்பாய்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர் உட்பட சுமார் 1500 பேர் துடிதுடித்துச் செத்தனர்.

24). 1920 -ஆம் ஆண்டு, வெள்ளையர்களை எதிர்த்து மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். இந்தியா நாடே அந்நிய நாட்டுத் துணிமணிகளை தீவைத்து கொளுத்தியது. 'சுதேசப் பொருட்களையே பயன்படுத்துவோம்' என்ற முழக்கம் இந்தியாவின் மூலை முடுக்கு ஏங்கும் ஒலித்தது!. 'சுயராஜ்யம்' கேட்டு நாக்பூரில் நடந்த அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியது.

25). 1921 -ஆம் ஆண்டு, பேஷனின் பெயரில் பெண்கள் ஸ்கர்ட்டுகளை மடக்க... ஸ்கர்ட்டின் நீளம் குறைய ஆரம்பித்தது. வேறு சில பெண்களோ இன்னும் ஒரு படி மேலே சென்று சிகரெட், மது ஆகியவற்றைக் கையில் எடுத்தார்கள். 'ஐரோப்பியப் பெண்களின் இந்தத் தாக்கம் எங்கே நமது நாட்டுக்கு வந்து விடுமோ? என்று அஞ்சிய அமெரிக்கா, பெண்களின் ஆடைகள் சம்பந்தமாக புதிய சட்டம் கொண்டு வந்தது!
26). 1921 -ஆம் ஆண்டு, ஏழைப் பெண்கள் கருவுற்று, குழந்தையும் பெற்றுக்கொண்டு பிறகு அதைச் சுமக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர்! இதுபோன்ற ஏழைப் பெண்களுக்கு உதவ கிறிஸ்துவத் தேவாலயங்களின் எதிர்ப்பை மீறி மார்ச் 17 -ஆம் தேதி லண்டனில் 'குடும்பக் கட்டுப்பாடு' மருத்துவமனை ஒன்று முதன் முதலாகத் தொடங்கப்பட்டது!

27). 1926 -ஆம் ஆண்டு, '2000 -ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?' என்ற கேள்வியை மூலக்கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'Metropolis' என்ற மாபெரும் திரைப்படம் வெளியிடப்பட்டது! படத்தின் இயக்குனர் பிரிட்ஸ் லேங்.

28). 1927 -ஆம் ஆண்டு, மோனோ ப்ளைன் என்ற விமானத்தில் தனி ஆளாக நியூயார்க் நகரத்திலிருந்து கிளம்பி அட்லாண்டிக் கடலை ஒரே மூச்சில் கடந்து சார்லஸ் லிண்ட்பர்க் என்பவர் சாதனை நிகழ்த்தினார்.

29). 1928 -ஆம் ஆண்டு, லாரல் - ஹார்டி இரட்டையர்களின் நகைச்சுவையை உலகமே வயிறு வலிக்க சிரித்து ரசித்தது! இந்த ஆண்டில் மட்டும் இவர்கள் நடித்த நான்கு படங்கள் திரைக்கு வந்தன.

30). 1929 -ஆம் ஆண்டு, சரத்திரம் கண்டிராத அளவுக்கு பங்குச் சந்தை வியாபாரம் வீழ்ச்சி அடைந்தது. இதை அடுத்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் அநாதரவாக வீதிகளுக்குத் தள்ளப்பட்டனர்.




நன்றி: வாவ் 2000, விகடன் பிரசுரம்.




(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).



என்றும் அன்புடன்

6 கருத்துகள்:

  1. அனைத்தும் தெரிந்துக்கொள்ள வேண்டிய புதிய தகவல்கள், தொடரவும்.....

    பதிலளிநீக்கு
  2. விரிவான நல்லதொரு தொகுப்பு... பாராட்டுக்கள்... நன்றி...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் உபயோகமான நல்ல தகவல் .நன்றி

    பதிலளிநீக்கு
  4. நல்ல தகவலுள்ள பதிவு



    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  5. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது ....... மிக்க நன்றி!!!

    பதிலளிநீக்கு