புதன், செப்டம்பர் 14, 2011

914 பக்தர்களை கொன்ற சாமியார் 'ஜிம் ஜோன்ஸ்' - ஒரு பார்வை

இந்த சீரியல் கில்லர்கள் பற்றிய பதிவெழுதி ரொம்ப நாளாகிவிட்டது. 'வாரம் ஒரு சீரியல் கில்லர்' என்று சொல்லிவிட்டு இப்போது மூன்று மாதம் கழித்து எழுத வந்திருக்கிறேன். ஆனால் இது சீரியல் கில்லர் பதிவல்ல.


வசூல் ராஜா படத்தில் கமல் ஒரு வசனம் சொல்லுவார், 'கடவுள் இல்லைன்னு சொல்றவனை நம்பலாம், கடவுள் இருக்குன்னு சொல்றவனையும் நம்பலாம், ஆனா நான் தான் கடவுள்ன்னு சொல்றவனை மட்டும் நம்பாதே' என்று. இன்றும் சிலர் நான் தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

அவர்களையும் நம்பி இந்த நவநாகரிக உலகத்தில் கூட ஒரு கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த மாதிரி சாமியார்கள் நல்ல போதனைகள், தத்துவங்கள் என்று நல்லவிதமாக ஆரம்பித்து பிறகு அவர்களது சுயரூபத்தை காட்டுவார்கள். இது வெளிவுலகிற்கு தெரியாமலும் பார்த்துக்கொள்வார்கள்.

அப்படியும் சில விஷயங்கள் வெளியுலகிற்கு தெரிந்து குறிப்பிட்ட சாமியார் ஒரு கொலைகாரனாகவோ அல்லது காமுகனாகவோ இருந்தால் அப்போது தான் அவனை 'அடப்பாவி' என்று பொதுஜனம் புரிந்து கொள்ளும். இப்போது நாம் பார்க்கப்போவது அப்படி ஒரு சாமியாரைப் பற்றித்தான். அவன் பெயர் ஜிம் ஜோன்ஸ்.
James Warren 'Jim' Jones 13 மே 1931 அன்று அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தில் பிறந்தான். இவனது தந்தை முதலாம் உலகப்போரில் பங்குபெற்று ஊனமாகி ஒய்வு பெற்ற ஒரு சிப்பாய். 1945 க்குப் பிறகு இவரின் பெற்றோருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அம்மாவுடன் ஜிம் ஜோன்ஸ் தனியாக வந்துவிட்டான் .

1949 இல் பள்ளிப்படிப்பை முடித்த ஜோன்ஸ், இண்டியானா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்தான். அதே சமயம் இவன் பகுதிநேர மருத்துவமனை பணியாளராக வேலை செய்யும் இடத்தில் Marceline Baldwin என்ற பெண்ணை காதலித்து திருமணமும் செய்துகொண்டான். இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.

1961 இல் B.Ed படிப்பை முடித்த ஜிம் ஜோன்ஸ் ஒரு கம்யூனிஸ்ட் ஆக மாறியிருந்தான். அதை விட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவன் சிறுவயதிலிருந்தே சர்ச்சில் பணிபுரிந்திருக்கிறான் அவன் அம்மாவோடு.

ஜிம் ஜோன்ஸ் தம்பதிக்கு பிறந்த குழந்தை மட்டுமல்லாது ஏழு குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்தார்கள். அவன் தன் மற்ற நண்பர்களையும் தத்தேடுக்கச் சொன்னான். ஜோன்ஸ் ஏற்கனவே தேவாலயங்களில் வேலை பார்த்ததால் ஒரு பாதிரியாராக மாறி பல பேருக்கு மத போதனைகள் செய்ய ஆரம்பித்திருந்தான்.

அதிலும் குறிப்பாக அமெரிக்கக் கறுப்பர்களிடம் அதிக அக்கறை செலுத்தினான். அவனுக்கென்று தனியாக ஒரு தேவாலயம் தேவைப்பட்டது. அதற்க்கான பணம் பண்ணவே இந்த மத போதனையை தொழிலாக கையிலெடுத்தான். 'குடும்பத்தில் கஷ்டமா? தீராத நோயா? வாழ்க்கையில் விரக்தியா? என்னிடம் வாருங்கள். கடவுளிடம் உங்களுக்காக மன்றாடி நான் தீர்த்து வைக்கிறேன்' என்று தன் மத போதனைகளை மக்களிடம் பரப்ப ஆரம்பித்தான்.

'காக்கா உட்கார, பனம்பழம் விழுந்த கதையாக' இவனிடம் வந்தவர்களின் கஷ்டங்கள், சோகங்கள் நீங்கி விட்டதாக மக்கள் நம்ப ஆரம்பித்தனர். ஜிம் ஜோன்ஸும் கொஞ்சம், கொஞ்சமாக பிரபலமடைய ஆரம்பித்தான். ஆரம்பத்தில் ஜிம் ஜோன்ஸ் ஸான் பிரான்சிஸ்கோவில் ஒரு சிறு அறையில் தினமும் சில சிஷ்யர்களோடு கூடுவான். பின்பு போதுமான சிஷ்யர்கள் அவனுக்கு வந்து சேர்ந்தார்கள். ஒரு புதிய ஆலயத்தை வாங்குவதற்கான பணமும் அவனுக்கு வந்து சேர்ந்தது.

1956 அன்று ஒரு ஆலயத்தை வாங்கி அதற்க்கு 'மக்களின் கோயில்' என்று பெயர் சூட்டினான். அந்த ஆலயத்திற்கு அவனே நிர்வாகி. அவன் பிரபலமாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவனை இண்டியானா அமைச்சகமும் கவனிக்க ஆரம்பித்தது. அதே சமயம் அவன் உள்ளூர் அரசியவாதிகளாலும், தினசரி நாளிதழ்களாலும் அசுர சக்தியாக வளர்ந்துகொண்டிருந்தான்.

ஒவ்வொரு முறையும் தன்னை CBI அல்லது FBI போன்றவர்கள் தன்னை தொடர்கிறார்கள் என்று செய்தி அவனுக்கு வரும்போது தன் ஆசிரமமாக மாறிய தேவாலயத்தையும் மாற்றத் தவறமாட்டான். அதுமட்டுமல்ல, நாளுக்குநாள் அவனுக்கு சிஷ்யர்கள் அதிகமாக ஆரம்பித்தார்கள்.
ஒரு இரண்டு இடங்களுக்கு தன் இருப்பிடத்தை மாற்றிய ஜிம் ஜோன்ஸ், கடைசியாக தேர்ந்தெடுத்த ஒரு இடம் தான் 'கயானா' என்ற காடு. அந்த காட்டில் தன் ஆஸ்ரமத்தை கட்ட அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி அங்கே தன் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ ஆரம்பித்தான். அந்த மொத்த காட்டின் பரப்பளவு 3842 ஏக்கர்கள்.

வெளித்தோற்றத்தில் மக்களுக்கு அவன் நல்லவனாக தெரிந்த அவன், நாளாக, நாளாக மாற ஆரம்பித்தான். அவனை அனைவரும் 'அப்பா' என்றே அழைக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். பக்தர்களின் சொத்துக்களை ஆஸ்ரமத்திற்கு நன்கொடையாக கொடுக்க வேண்டும் என்று சொல்லி அனைவரின் சொத்துக்களையும் பிடுங்கிக் கொண்டான்.

இரவானால் அந்த ஆஸ்ரமத்தில் ஒரே கூத்தும், கும்மாளமுமாக இருக்கும். பணம், போதை, பெண்கள் என்று எதையும் விட்டு வைக்க வில்லை அவன். ஒரு கட்டத்தில் தன்னையே அவன் 'கடவுள்' என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்தான். அதையும் அந்த 'முட்டாள் பக்தர்கள்' ஏற்றுக்கொண்டார்கள்.

ஜிம் ஜோன்ஸ் பல வக்கிரமான செக்ஸ் விளையாட்டுக்களில் ஈடுபட ஆரம்பித்தான். இவன் ஒரு Bisexual. அதாவது ஆண், பெண் இருவரிடமும் செக்ஸ் வைத்துக் கொள்வான். பக்தர்களின் மனைவிகளுடன் உடலுறவு கொள்ளவதில் அதிக விருப்பம் காட்டினான். 'பாவங்களிலிருந்து விடுபட்டுப் பரிசுத்தம் அடைய நேரடியான வழி இது!' என்பான் ஜிம் ஜோன்ஸ்.

தனக்கு அடங்காத குழந்தைகளுக்கு கூட ஜிம் ஜோன்ஸ் கடுமையான தண்டனைகள் தந்தான். பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை ஒரு டின்னுக்குள் பூட்டி வைப்பது இவனின் வழக்கம் ஆகும்.

ஜிம் ஜோன்ஸின் ஆஸ்ரமத்தில் இது போன்று நடக்கும் விஷயங்கள் மெதுவாக பொதுமக்களிடையே பரவ ஆரம்பித்தது. பெருவாரியான மக்கள் அந்த ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தை விசாரிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தினர். அரசும் அதை ஏற்றுக்கொண்டு மனித உரிமை கழக அமைப்பிலிருந்து ஒரு நான்கு பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது.

அங்கு சென்ற விசாரித்த பிறகு தான், மக்களின் காதுக்கு வந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரிய வந்தது. ஆனால் விசாரித்து விட்டு நாடு திரும்ப நினைத்த மனித உரிமை கழக அமைப்பாளர்கள், ஜிம் ஜோன்ஸின் பாதுகாவலர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகிப் போனார்கள். ஆனால் இதை விட ஒரு பெரும் பயங்கரம் அடுத்த இரண்டு நாளில் நடந்து, நாட்டையே அதிர்ச்சி பெறச் செய்தது.
நவம்பர் 18, 1978.. அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள கயானாவைச் சேர்ந்த 'ஜோன்ஸ் டவுன்' என்கிற பகுதியில் சுமார் ஆயிரம் பக்தர்கள் க்கொடியிருந்தார்கள். உயரமான மேடை.. ஒலிபெருக்கியில் பக்திமயமான இசை..

திடிரென்று பக்தர்கள் பரவசமாக கூக்குரல் எழுப்ப, அதோ, மேடைமீது தோன்றுகிறார் ரெவரென்ட் சம்ஸ் வாரன் ஜோன்ஸ். இசை பணிவோடு நிறுத்தப்படுகிறது.

காற்றைக் கிழித்துக்கொண்டு எதிரொலிக்கும் கம்பிரமான குரலில் சம்ஸ்.. அதாவது, ஜிம் ஜோன்ஸ் முழங்குகிறார்.

'என் அருமைக் குழந்தைகளே, இந்த உலகைப் பொறுத்தவரையில், இதுவே நமது கடைசி சந்திப்பு!

நாம் எல்லோரும் இறக்கப் போகிறோம். வேறுவழி இல்லை. நாம் உயிர் தியாகம் செய்யாவிட்டால், விளைவுகளை விபரீதமாகப் போய்விடும்!

வெளியிலிருந்து நெருங்கிக்கொண்டிருக்கும் தீயசக்திகள் நம்மை அழிக்க முடிவெடுத்துவிட்டன. அவற்றிடம் சிக்கப்போகிறோமா அல்லது இறைவனிடம் சரணடையப் போகிறோமா?

நான் உங்கள்மீது வைத்திருக்கும் அதே அன்பு என்னிடமும் உங்களுக்கு இருப்பது உண்மையானால், என்னோடு உயிர் துறக்கத் தயாராகுங்கள்.

கவலை வேண்டாம். இது இறைவனின் கட்டளை! நாளை நாம் அனைவரும் மீண்டும் உயிர்த்தெழுவோம். சொர்க்கலோகமான ஒரு புதிய உலகத்தில் நாம் மீண்டும் சிந்திப்போம். நாளை நமது! பக்தர்களே! என்னோடு வருவீர்களா?' - உருக்கமாக, ஆவேசமாக ஜிம் ஜோன்ஸ் கேள்வி எழுப்ப, 'வருவோம், வருவோம்..!' என்று கூட்டம் இடியோசை போல முழங்குகிறது.

அதைத் தொடர்ந்து..

சயனைடு விஷம் கலக்கப்பட்ட மினரல் தண்ணீர் அடங்கிய பெரிய 'ட்ரம்'களை சிஷ்யர்கள் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அதில் லெமன் ஜூஸ் கலக்கப்பட்டது. 'இந்த பானத்தைக் குடித்த, சில நிமிடங்களில் நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஆகவே, கட்டுப்பாட்டுடன், குடும்பம் குடும்பமாக வரிசையில் வந்து பானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். முதலில் குழந்தைகள்!' - ஒலிபெருக்கியில் ஜிம் ஜோன்ஸ் ஆணையிடுகிறார்.

வரிசையாக வந்து, முதலில் குழந்தைகளுக்கு பெற்றோர் விஷக் குடிநீரைப் புகட்டிவிடுகிறார்கள். கைக்குழந்தைகளின் வாயைப் பிரித்து, சிரஞ்ச் மூலம் நர்ஸ்கள் சயனைடு விஷத்தைப் புகட்டுகிறார்கள். சில சிறுவர்கள் முரண்டுபிடிக்கிறார்கள். சிஷ்யகோடிகள் பலவந்தமாக அவர்களைப் பிடித்துக் கொண்டு, விஷத்தைக் குடிக்க வைக்கப்படுகிறார்கள். ஒரு வழியாக ஜிம் ஜோன்ஸின் திருநாமத்தைக் குரல் நடுங்க உச்சரித்தவாறு, அமைதியாகவே அத்தனை பேரும் விஷம் குடிக்க.. 'ட்ரம்'கள் அகற்றப்படுகின்றன.

சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தள்ளாட ஆரம்பிக்க, தலைமை சிஷ்யர்கள் அவர்களைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று, அகன்ற புல்தரையில் வரிசையில் படுக்க வைக்கிறார்கள். பிறகு ஓரமாக நின்று, சிஷ்யர்கள் குவளையில் விஷம் எடுத்து சாவதானமாகக் குடிக்கிறார்கள். 'எல்லோரும் கைக்கோத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் பக்கத்தில் இருக்கும் உங்கள் சகோதரனை, சகோதரியை அரவணைத்துக் கொள்ளுங்கள். முடிவு நெருங்கிவிட்டது.புதிய ஆரம்பம் துவங்கி விட்டது!' - கீறிச்சிடுகிறார் ஜிம் ஜோன்ஸ்.

படுத்திருந்த அத்தனை உடல்களும் துடிக்கின்றன. 'என்ன இது?' என்பதுபோல எல்லோருடைய மூக்கு, வாய் வழியாக சிவந்த ரத்தம் எட்டிப் பார்க்கிறது. பிறகு.. மரண அமைதி..!

சூரியன் தொலைவிருக்கும் மலைகளுக்குப் பின்னே மறைகிறான். மெள்ள இருள் சூழ்கிறது..

'முயற்சி செய்தேன்.. முடிந்த வரை முயற்சி செய்தேன்..' என்று உரக்கக் குரலெழுப்பிய ஜிம் ஜோன்ஸ் வானத்தை அண்ணாந்து பார்த்து, 'அம்மா.. அம்மா..!' என்று அலறுகிறார்.

மறுவினாடி 'டுமில்' என்ற சத்தம். தன் நெற்றிப்பொட்டில், ஜிம் ஜோன்ஸ் வைத்திருந்த கைத்துப்பாக்கி இயங்குகிறது. மூளை சிதற, சரிந்து விழுந்த ஜிம் ஜோன்ஸின் உயிர் பிரிகிறது!

சற்று முன்கூட்டியே தகவல் போய், ஹெலிகாப்டர்களில் போலீஸ் அந்த இடத்துக்கு விரைந்தும்... காலம் கடந்துவிட்டது. அவர்கள் வானிலிருந்து பார்த்தபோது, பசுமையான பறந்த வெளியில் உடல்கள் இறைந்துகிடந்தன. கிட்டத்தட்ட 914 பக்தர்கள் விஷம் அருந்தி இறந்து போயினர். அதில் 276 பேர் குழந்தைகள் என்பது தான் கொடுமை!.

கவர்ச்சி மிகுந்த ஒரு போலி சாமியார், பக்தகோடிகளை உச்சக்கட்டமாக எந்த அளவுக்கு அடிமைகளாக இயக்க முடியும் என்பதற்கு ஜிம் ஜோன்ஸ் ஒரு உதாரணம்.

சில தகவல்களுக்கு நன்றி: மதனின் 'மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்', விகடன் வெளியிடு.


(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).








என்றும் அன்புடன்

15 கருத்துகள்:

  1. மோசமானவங்கள்லயே முக்கியமானவனா இருப்பான் போல இருக்கே...

    பதிலளிநீக்கு
  2. தலைப்புல சாமியாருக்கு பதிலா பாதிரியாருன்னு குறிப்பிட்டிருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  3. கொடூரமான ஆளா இருக்கான்!

    பதிலளிநீக்கு
  4. ..ஆள பார்த்தாலே வில்லன் மாதிரி இருக்கான்..

    ..நான் கேள்விப்படாத தகவல்..
    ..நல்ல பகிர்வு.. நன்றி காவலா..

    பதிலளிநீக்கு
  5. உலகத்தின் எல்லா மூலைகளிலும் ஏமாற்றூபவர்களும் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் இவ்வளவு கண் மூடித்தனமான மடையர்களை/பக்தர்களை இன்றுதான் கேள்விப் படுகிறேன்.

    பகிர்வுக்கு நன்றி. அடுத்த பதிவை எதிர் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ..நான் கேள்விப்படாத தகவல்..
    ..நல்ல பகிர்வு.. நன்றி காவலா
    ,,tollywood star Prabhas,,பதிவை எதிர் பார்த்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம் பாட்டு இவரை நம்பி செத்தங்களுக்கு பொருந்தும்!!

    பதிலளிநீக்கு
  8. நண்பா அந்த புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். படிக்கும் போது மனம் பதைபதைத்தது உண்மை.

    பதிலளிநீக்கு
  9. He is a father not a saint pls change the titleHe is a father not a saint pls change the title

    பதிலளிநீக்கு
  10. இவமெல்லாம் ஒரு மனுஷனா.

    இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

    தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    பதிலளிநீக்கு
  11. "தட்டுங்கள் கொல்லப்படும்"

    பதிலளிநீக்கு
  12. திகைப்போடு வாசித்து முடிக்கிறேன் ....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

    பதிலளிநீக்கு
  13. நம்மட ஊர்ச் சாமிமார் கொஞ்சம் பரவாயில்லையோ?

    பதிலளிநீக்கு