வெள்ளி, செப்டம்பர் 30, 2011

கதவு தட்டப்பட்டது - அமானுஷ்யத் தொடர் பகுதி - 8

லில்லி ஆன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

'டொக்... டொக்...'

கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள். பெட்ரூம் லைட்டைப் போட்டாள். இரவு மணி 11.55.

இரவு பணிக்குப் போன தன் கணவன் நிக்சன், ஏதாவது காரணமாக வீடு திரும்பி விட்டானா என்ற சிந்தனையுடன் நைட் கவுனைச் சரி செய்துகொண்டு பெட்ரூமை விட்டு ஹாலுக்கு வந்தாள்.

'நிக்சன்' - என்று குரல் கொடுத்தாள். பதில் இல்லை. இரண்டு வினாடி நிசப்தம். பிறகு மீண்டும், 'டொக்... டொக்...'

'யாரது?' - உரக்கக் கேட்டாள்.

இப்போதும் பதில் இல்லை. சிறிது நேர அமைதிக்குப் பின், அதே சீரான இடைவெளியில், இரண்டு முறை மீண்டும் கதவு தட்டப்பட்டது. அந்த ஏரியாவில் இரவு நேரங்களில் அவ்வப்போது திருட்டு நடப்பதை லில்லி பேப்பர்களில் படித்திருக்கிறாள். அப்போது கதவைத் திறப்பது ஆபத்து என்று நினைத்த லில்லி, தன் கணவனுக்குப் போன் செய்ய முடிவெடுத்தாள்.

ஹாலில் இருந்து போன் செய்ய பெட்ரூமுக்குத் திரும்பியபோது மீண்டும் முன்புபோலவே இரண்டு முறை கதவு தட்டப்பட்டது. லில்லி பயத்துடன் அவசரமாக டெலிபோனை எடுத்தாள். எங்களைச் சுழற்றினாள். நிக்சன் சீக்கிரமாகக் கிடைத்து விட்டான். பயத்தோடு விஷயத்தைச் சொன்னாள்.

'கதவை எந்தக் காரணம் கொண்டும் திறக்காதே. நான் உடனே ஜீப் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்'.

நிக்சன், அவசரமாக மானேஜரிடம் பர்மிஷன் சொல்லிவிட்டு, ஜீப்பை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்தான். நிக்சனின் வீடு அப்படியொன்றும் ஒதுக்குப்புறமான ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இருக்கவில்லை.

'நார்வே'யின் பிரதானமான வெஸ்ட் அவென்யுவில் தான் அவர்கள் கட்டிய புதுவீடு இருந்தது. அக்கம்பக்கத்திலும் வீடுகள், ஒரு பால் டிப்போ, டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எல்லாமே இருந்தன. எனவே லில்லிக்கு எந்த ஆபத்தும் நேராது என்ற நம்பிக்கையுடன் தன் வீட்டு வீதிமுனையில் ஜீப்பை திருப்பினான்.

தெருவில் விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. ஆள் நடமாட்டம் இல்லை. தூரத்தில் அவன் வீடு தெரிந்தது. வாசலில் யாராவது இருக்கிறார்களா என்று உற்றுப் பார்த்தான். ஒருவரும் இல்லை. வீட்டின் வாசலில் ஜீப்பை நிறுத்தினான். அவசரமாக இறங்கிக் கதவைத் தட்டி 'லில்லி... லில்லி' என்று குரல் கொடுத்தான். பதில் இல்லை. பதற்றத்தோடு உரக்க 'லில்லி' என்று குரல் கொடுத்தான். பெட்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

'லில்லி... லில்லி நான்தான், நிக்சன் வந்திருக்கேன், கதவைத் திற'.
யா... யார்... நிக்சனா?' என்று லில்லியின் நடுங்கிய குரல் உள்ளே இருந்து வந்தது. சிறிது நேரத்தில் கதவைத் திறந்தாள். பயத்தோடு நிக்சனைக் கட்டிக் கொண்டாள். ஆறுதல் சொன்னான்.

'நீ போன் செய்த பத்து நிமிடங்களில் நான் வந்துவிட்டேன். ஏதாவது கனவு கண்டு பயந்திருப்பாய். நான் தெருவில் நன்றாகத் தேடித் பார்த்தேன். யாரும் இல்லை. நீதான் வீணாகப் பயந்து போன் செய்திருக்கிறாய்' என்று பேசியபடி வெளிக்கதவைச் சாத்தி, உள்தழ் போட்டுவிட்டு, பெட்ரூமுக்குள் லில்லியை அணைத்தபடி நிக்சன் நடந்தான்.

'டொக்... டொக்...'

மீண்டும் அதே சத்தம். நிக்சன் நின்றான். லில்லி வெளிறிய முகத்துடன் கணவனைப் பார்த்தாள். 10 வினாடிகள் கடந்தன. மீண்டும் ஒரே சீராக இரண்டு முறை கதவு தட்டும் சத்தம் கேட்டது. நிக்சன் ஒரே தாவில் பெட்ரூமுக்குள் ஓடி கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளிக் கதவுக்குப் பக்கத்தில் வந்து தாழைத் திறக்கும் போதும் 'டொக்... டொக்...'

அடுத்த வினாடியே தாழைத் திறந்து துப்பாக்கியுடன் நிக்சன் வெளியே பாய்ந்தான். தெருவில் விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. வெளியில் யாரும் இல்லை. வீதி முனைவரை கண்களைத் துழாவ விட்டான்.

நிக்சனுக்குப் புரிந்துவிட்டது. எந்த மனிதனாலும் இவ்வளவு சீக்கிரம் கதவைத் தட்டிவிட்டு ஓடி மறைய முடியாது. கதவைத் தட்டுவது ஆள் இல்லை. வேறு எதோ ஒன்று. அமானுஷ்யம். அவன் மூளை, ஆராய்ச்சி மனப்பான்மையுடன் வேளை செய்தது.

அமைதியாக வாசல் கதவைத் தாழிட்டு விட்டு, மெதுவாக ஹாலுக்கு நடந்து வந்தான். லில்லி பயத்தில் உறைந்து போய் நின்றிருந்தாள். நிக்சன் எதோ ஒரு திட்டத்துடன் வாசல் கதவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்தபடி சிறிது நேரத்தில் கதவு இரண்டு முறை தட்டப்பட்டது.

நிக்சன் நிதானமாகக் கேள்வி கேட்டான்.

'நீ மனிதன் இல்லை... எதோ அமானுஷ்ய சக்தி என்று நினைக்கிறேன். உன்னால் பேச முடியவில்லை. கதவைத் தட்டத்தான் முடிகிறது. நீ எதோ ஒன்றை எங்களிடம் சொல்ல விரும்புகிறாய். நான் சொல்வது சரி என்றால் இப்போதே மூன்று முறை கதவைத் தட்டு. இல்லை என்றால் ஒரு முறை கதவைத் தட்டு'.

கொஞ்ச நேர அமைதி.

பிறகு, 'டொக்... டொக்... டொக்...'
மிகச் சரியாக மூன்று முறை கதவு தட்டப்பட்டது.

'நீ எனக்கு உறவா? உறவு என்றால் மூன்று முறை தட்டு. இல்லையென்றால் ஒரே முறை தட்டு'.

'டொக்... டொக்... டொக்...'

'நான் இங்கு புதிதாக வீடு கட்டியுள்ளேன். நீ முன்னால் இந்த இடத்துக்கோ, இல்லை முன்பு இருந்த வீட்டுக்கோ சம்பந்தப்பட்டவனாக இருந்தால் ஒரே ஒரு முறை தட்டு. இல்லையென்றால்...'

'டொக்'.

'இந்த வீட்டில் உனக்கச் சொந்தமாக ஏதேனும் இருந்து, அதைக் கேட்டு வாங்க வந்திருக்கிறாயா? ஆமாம் என்றால் ஒரு முறை தட்டு'.

'டொக்'.

நிக்சன் மௌனமானான். நான் புதிதாகக் கட்டிய வீட்டில் நிச்சயமாக எந்தப் பொருளும் கதவைத் தட்டும் நபருடையது அல்ல. இருந்தும் எதோ கேட்டு வந்திருக்கிறார் என்றால்? கொஞ்சம் யோசித்த நிக்சன், அடுத்த கேள்வியைக் கேட்டான்.

'இங்கே உன்னுடைய பொருள் ஏதாவது மறைவாக ஒளிந்து வைக்கப்பட்டுள்ளதா? அப்படி என்றால் ஒரு முறை மட்டும்...'

'டொக்'.
'எந்த இடத்தில்?'

பதிலே இல்லை, நிக்சன் யோசித்தான். பின்னர் அவனே தன் தவறை உணர்ந்து, 'உனது பொருள், வீட்டுக்குள் என்றால் ஒரு முறை - வெளியே முன்பக்கம் என்றால் இரண்டு முறை - இல்லை - பின்பக்கம் என்றால் மூன்றுமுறை - இல்லை... பக்கவாட்டில்...'

'டொக்... டொக்... டொக்...'

நிக்சன் தெளிவாக உணர்ந்து கொண்டான். யாரோ இறந்த ஒருவனது ஆவிதான் தன் பொருள் இன்னும் கைக்குக் கிடைக்காததை நினைத்து ஏக்கத்திலேயே அலைகிறதேன்று. பின்பக்கம் செல்ல நினைத்தபோது மனைவி தடுத்தாள். 'பகலில் பார்க்கலாம்' என்றாள். மீண்டும் நிக்சன் கதவருகே நின்று 'என் மனைவி பயப்படுகிறாள். நீ உண்மையிலேயே நல்ல ஆத்மாவாக இருந்தால் நாளை பகலில் நான் அதைத் தேட சம்மதம் தந்து இப்போது போக வேண்டும். ஐந்து முறை தட்டு பார்க்கலாம்'.

'............'

'பார்த்தாயா? நீ கெட்ட ஆத்மா. எனவே என்னைத் துன்புறுத்தவே இப்படிப் பாசாங்கு செய்கிறாய்' என்றான் நிக்சன்.

'டொக்!டொக்!டொக்!டொக்!டொக்!'

நிக்சனுக்கு ஆவியைப் பற்றிய கிலி நீங்கியது. இருவரும் அமைதியாகப் படுத்தனர். மறுநாள் காலை, நிக்சன் தன் வீட்டு பின்புறத் தோட்டத்தில் பல இடங்களைத் தோண்டி கடைசியில் ஒரு செர்ரி மரத்தின் அடியில் ஒரு பெட்டியைக் கண்டுபிடித்தான். அதை வெளியே எடுத்து திறந்தபோது உள்ளே 12,500 டாலர்கள் அடுக்கப்பட்டிருந்தன. ஆச்சரியத்துடன் பணத்தைப் புரட்டியபோது பணத்தின் நடுவே மடிக்கப்பட்ட ஒரு துண்டுப் பேப்பர் இருந்தது, அதில்,

'Wild Stone, 7512B, Beach Station, East Avenue' என்ற முகவரி இருந்தது.

அடுத்தநாள் பாக்டரிக்கு விடுமுறை போட்டுவிட்டு நிக்சன் முகவரியை மட்டும் எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட வீட்டைத் தேடித் போனான். அந்த வீட்டில் கல்லூரியில் படிக்கும் மானவர்ர்கள் தங்கி இருந்தனர். ஒயில்ட் ஸ்டோன் என்ற பெயரில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இல்லை. நிக்சன் சிரத்தை எடுத்து விசாரித்தான். இரண்டு நாட்களில், நகரத்துக்கு வெளியில் சேரி மாதிரி இருந்த ஒரு பகுதியில் ஒயில்ட் ஸ்டோனின் மனைவி இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டான்.
நிக்சன் அவளிடம் பேச்சுக் கொடுத்தான். 'ஏழு வருடங்களுக்கு முன்னால் என் கணவர் திடிரென்று எதோ விபத்தில் இறந்துவிட்டார். உடல்கூட நான்கு நாட்கள் கழித்தே எனக்குக் கிடைத்தது' என்று வருத்தத்தோடு கூறினாள். மிகவும் சோர்ந்து இளைத்துக் காணப்பட்டாள். நிக்சன் காரணம் கேட்டான்.

'இரண்டு வாரங்களுக்கு முன்னால் உடல்நலமின்றி டாக்டரிடம் போயிருந்தேன். வயிற்றில் கட்டி இருப்பதாகவும், ஆபரேஷன் செய்ய நிறைய செலவு ஆகும் என்றும், ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் சொன்னார்கள். வசதி இல்லாத நான் இனி என் கணவர் இருக்கும் இடத்துக்கே போய்ச் சேரலாம் என்று அவரை நினைத்துத்தான் தினம் பிரார்த்தனை செய்கிறேன். அது நிறைவேறும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கொஞ்ச நாளாகவே என் வீட்டுக் கதவை யாரோ தட்டுகிறார்கள். திறந்து பார்த்தால் யாரும் இல்லை. என்னவோ தெரியவில்லை. அப்படித் தட்டுவது என் கணவராகத்தான் இருக்கும் என்று என் மனதிற்குப் படுகிறது' - என்று அவள் கூறியபோது நிக்சனுக்கு எல்லாமே தெளிவானது.

ஒயில்ட் ஸ்டோன் ஆவி, தன் மனைவி மூலம் தான் புதைத்த பணத்தைப் பற்றி அறிவிக்க முயன்றிருக்கிறது - அதை அவள் புரிந்துகொள்ள முடியாததாலே பணம் புதைத்து வைத்துள்ள இடத்துக்கு, அருகில் உள்ள தன் வீட்டில் வந்து, கதவைத் தட்டியுள்ளது என்று நிக்சன் உணர்ந்து கொண்டார்.

மறுநாள் நிக்சன் பணப்பெட்டியை ஒயில்ட் ஸ்டோனின் மனைவியிடம் சேர்ப்பித்து, நடந்ததையும் விவரித்தான். எல்லாவற்றையும் கெட்ட அவள், சில நிமிட அமைதிக்குப் பின் சொன்ன வார்த்தைகள், 'தன் இரண்டு நண்பர்களுடன் கூட்டு வியாபாரம் நடத்தி வந்தார். அதில் மோசடி செய்து பணத்தை எடுத்துவிட்டதாக நண்பர்கள் இருவரும் இவரைத் துரத்திவிட்டனர். நான் கேட்டபோது மறுத்த என் கணவர் இப்போது நான் சாவுக்குப் போராடும் நிலையில் தன் தவறை ஒப்புக்கொண்டு எனக்கு உதவியிருக்கிறார்' என்று கண்ணீருடன் ஆவியின் பிளாஷ் பேக்கை சொல்லி முடித்தாள்.

நிறைவேறாத ஆசைகளுடன் அகால மரணமடைந்தவர்கள் மீண்டும் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்து ஏதேனும் ஒரு வகையில் தங்கள் ஆசாபாசங்களை நிறைவேற்றிக் கொள்ள முனைவார்கள்.

நன்றி: திரு. சஞ்சீவியின் 'பேய்', கிழக்கு பதிப்பகம்.



(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


என்றும் அன்புடன்

5 கருத்துகள்:

  1. முந்தய பாகங்களுக்கு லிங்க் கொடுத்தால் என்னவாம்...?

    பதிலளிநீக்கு
  2. நல்ல லாஜிக்கல் லிங்க் இந்த பேய் கதையில , எங்க வீடு மாடி ல இருந்தும் டொக் டொக் சத்தம் வருது
    ஆனா , நான் கேட்டாலும் ,அது டொக்கவே மாட்டேன்குது , ஒரு வேளை தமிழ் தெரியாத பேயோ ?

    ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1

    நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

    பதிலளிநீக்கு
  3. திகில் கதையாக ஆரம்பித்து, சுவாரசியமாக முடிந்தது. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா03 மார்ச், 2012 18:39

    i have to read ur complete article but i don't have time i will come very soon

    பதிலளிநீக்கு