வியாழன், ஜூலை 14, 2016

எனக்கு பிடித்த புத்தகங்கள் 6 - சுஜாதா & நாவல்கள்...

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா:
எனக்கு பிடித்த புத்தகங்கள் 6 - சுஜாதா & நாவல்கள் 1

சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்'. இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலக்கட்டத்தின் பச்சை ரத்த படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும், இலட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரம்மாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா, சரித்திரப் புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார். குமுதத்தில் 'கருப்பு சிவப்பு வெளுப்பு' என்ற பெயரில் சில அத்தியாயங்கள் வெளிவந்து கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்ததால் நிறுத்தப்பட்டு மீண்டும் 'ரத்தம் ஒரே நிறம்' என்ற பெயரில் எழுதப்பட்டது இந்த நாவல். தன் தந்தையை  கொன்ற வெள்ளையனை பழி தீர்க்க சென்னபட்டினம் வருகிறான் முத்துக்குமரன். சென்னபட்டினத்தில் ஒரு கூத்தாடி கும்பலில் இருக்கும் பூஞ்சோலை என்ற பெண்ணுடன் நட்பாகி பின்பு காதல், காமம், பழிவாங்கல், சிப்பாய் கழகம் என்று கதை ஒரே சீராக வெவ்வேறு தளங்களில் மிக சிறப்பாக பயணிக்கிறது. முத்துக்குமரன் - பூஞ்சோலை - பைராகி அவர்களின் பழிவாங்கும் பயணக்கதை ஒரு புறம், மக்கின்சி - எமிலி - ஆஷ்லி அவர்களின் முக்கோண காதல் கதை மறுபுறம். இந்த இரண்டையும் சிப்பாய் கலகத்தோடு இணைத்து மிக அழகான ஒரு நாவலை கொடுத்திருக்கிறார் சுஜாதா. கதையின் விறுவிறுப்புக்கு எந்த ஒரு தொய்வுமின்றி கதை சொல்லியிருக்கிறார் நம்மவர். என்னை பொருத்தவரை சுஜாதா எழுதிய பல சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.

சின்னக்குயிலி -  சுஜாதா:
எனக்கு பிடித்த புத்தகங்கள் 6 - சுஜாதா & நாவல்கள் 2
தன் அப்பாவின் உயில் படி அவர் பிறந்து வளர்ந்த கிராமமான சின்னகுயிலிக்கு சில நல்ல காரியங்களை செய்ய வருகிறார் சிங்கப்பூரில் செட்டிலான மாணிக்கம். கிராமக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, கிராமத்தினருக்கு இலவச மருத்துவமனை என்ற திட்டத்தோடு வரும் அவருக்கு சில குறுக்கீடுகள், அதை தாண்டி அவர் கட்டிய பள்ளியினால் ஏற்படும் நெருக்கடிகள், இதற்க்கு நடுவில் அந்த கிராமத்திலிருக்கும் பதின்ம வயதுடைய பெண்ணான, படிக்கும் ஆர்வமுடைய தேவநாயகியை கட்டாயப்படுத்தி அவளது தந்தை திருமணம் செய்து கொடுத்ததை எதிர்த்து அவளை காப்பாற்றப் போராடுவது என்று இந்த கதையோடு இன்னும் ஒரு சில கிளை கதைகளோடு சேர்த்து மிக அழகாக எழுதியிருக்கிறார் சுஜாதா. ஒரு நல்ல சமுதாயத்திற்கு முன்னேற்றத் தேவையான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என பல விஷயங்களை செய்ய வரும் என்.ஆர்.ஐ ரஜினியை 'சிவாஜியில்' பார்த்திருக்கிறோம். கிராம தத்தெடுப்பு என்பதை நடிகர் பிரகாஷ்ராஜ், 'பிரின்ஸ்' மகேஷ் பாபு போன்றவர்கள் செய்வதையும் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவையனைத்தையும் 22 வருடங்களுக்கு முன்பே 'இந்த சின்னக்குயிலி' நாவலின் மூலமாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. ஒரு இடத்தில் 'அப்பிள் கணினியை' பற்றி கூட ஒரு வசன நடை வருகிறதென்றால், அது சுஜாதாவால் மட்டுமே சொல்ல முடியும். உண்மையில் ஏழ்மை ஒழிய வேண்டுமென்றால் அதற்க்கு ஆணிவேர் எது என்பதை மிகத்தெளிவாக சொல்லுகிறார் சுஜாதா. என்னைப் பொருத்தவரை 'ஹி ஹிஸ் ஆல்வேஸ் எ லெஜண்ட் ரைட்டர்'.

ஆ - சுஜாதா:
எனக்கு பிடித்த புத்தகங்கள் 6 - சுஜாதா & நாவல்கள் 3
இந்த கதை முன்பு விகடனில் தொடர்கதையாக வெளிவந்து, பின்பு நாவலாக வெளியிடப்பட்டது. மென்பொருள் பொறியாளரான தினேஷ்குமாருக்கு மண்டைக்குள் குரல்கள் கேட்க ஆரம்பிக்கிறது. அந்த குரல் அவரை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகிறது. அதனாலேயே தினேஷ் மூன்று முறை தற்கொலைக்கு முயல, அதிஷ்டவசமாக அதிலிருந்து தப்புகிறார். பின்பு மனோதத்துவ மருத்துவர், சாமியார், கோவில் பரிகாரம் என்று அந்த குரலை மறக்கடிக்க முயன்றாலும் அது விடுவதாக இல்லை. அதே சமயம், அவருக்கு அறிமுகமில்லாத சிலரின் பெயர்களும் சம்பவங்களும் நினைவுக்கு வர, அதைத்தேடி கிளம்புகிறார். அந்த பயணத்தில் அவருக்கு கிடைத்தது என்ன? இழந்தது என்ன? என்பதே இந்த நாவலின் கதை. கதையின் கடைசி இருபது பக்கங்களுக்கு முன் தான் லாயர் கணேஷும், வசந்தும் வருகிறார்கள். ஆனால் கதையின் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறையவில்லை. கதையில் போகிறபோக்கில் சில பல மருத்துவத்தின் பெயர்களையும், மருந்தின் பெயர்களையும் ஜஸ்ட் லைக் தட்டாக தட்டிவிடுகிறார் சுஜாதா. இந்த ஒரு நாவலிலேயே எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் சொல்கிறார் சுஜாதா, மனோதத்துவத்தை பற்றி. அவரின் நாவல் ஒவ்வொன்றையும் படிக்கும்போது அவரின் பிம்பம் எனக்குள் பெரிதாகிக் கொண்டே போகிறது என்பதே உண்மை.

திசை கண்டேன் வான் கண்டேன் - சுஜாதா:
எனக்கு பிடித்த புத்தகங்கள் 6 - சுஜாதா & நாவல்கள் 4
ஆண்ட்ரமீடா என்ற அண்டை விண்மீனில் இருக்கும் நோரா கிரகத்தின் பாரி என்ற வேற்றுகிரகவாசியும், 121 என்ற அவனின் அதிநவீன வாகனமும் பூமியை அழிப்பதற்காக வருகிறார்கள். ஆண்ட்ரமீடா விண்மீனுக்கும் வேறொரு கிரகத்திற்கும் நடுவில் பாலம் எழுப்ப வேண்டி அதற்கு தடையாய் இருக்கும் பூமியை முன்னறிவிப்போடு அழிக்க வரும் அவர்கள், காதலர்களான மணியையும் செங்கமலத்தையும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்திக்க நேர்கிறது. காதலர்களின் திருமண பிரச்சனை, பூமியை அழிக்க வந்தவர்களுக்கு வரும் தடங்கல்கள், செங்கமலத்தை 'கணக்கு' பண்ண பார்க்கும் 121 வாகனம் என்று கிண்டல் + Comedy + Sci-Fiction என கலந்து கட்டி ஒரு காக்டெயில் நாவலை கொடுத்திருக்கிறார் சுஜாதா. இந்த நாவலில் கடவுளை, ஒரு ரொம்ப சாதாரண ரேஞ்சுக்கு கிண்டலடிக்கிறார் சுஜாதா. அதே போல ஹாஸ்யத்திலும் குறை வைக்கவில்லை. எனக்குத் தெரிந்து விண்வெளி, அண்டம், வேற்றுக்கிரகவாசி போன்ற விஷயங்களை நம்பும்படியான கற்பனையோடு எழுத, எனக்குத் தெரிந்து சுஜாதாவை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதே நிஜம்.

One Bright Summer Morning - James Hadley Chase:
எனக்கு பிடித்த புத்தகங்கள் 6 - சுஜாதா & நாவல்கள் 5
ஒரு உண்மையை நான் இங்கே சொல்லியாகவேண்டும். நானும் எவ்வளவோ கிரைம் நாவல்களை படித்திருக்கிறேன். அதிலும் ராஜேஷ் குமாரின் நாவல்கள் மாஸ்டர் பீஸ். அதே போல சுஜாதாவும் த்ரில்லர் வகையறாவில் சிறந்த கதை சொல்லி. இவர்கள் எழுதிய பல நாவல்கள், 'ஆஹா, அட, வாவ்' என்று பல இடங்களில் என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது, அதிர்ச்சிக்குள்ளாக்கியும் இருக்கிறது. ஆனால் இந்த நாவலை போல வேறு எந்த நாவலும் என்னை ஆச்சர்ய அதிர்ச்சியை கொடுத்ததில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பிரபல நாடக எழுத்தாளர் விக்டர், புதிய நாடகம் எழுதுவதற்காக ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு பண்ணை வீட்டில் தன் மனைவி குழந்தை, வீட்டு வேலைக்காரன் மற்றும் நாய் சகிதம் அந்த வீட்டில் தங்குகிறார். ஒரு காலை வேளையில் வேலைக்காரன், அவர்களின் செல்ல நாய், பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கி என்று ஒரேயடியாக காணாமல் போக, பதற்றமடைகிறார்கள் விக்டர் தம்பதியினர். தொலைப்பேசி வேலை செய்யவில்லை, கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்று இன்னும் அவர்களை பயமுறுத்துகிறது அந்த சூழல். கிரேமர் என்று முன்னாள் கடத்தல்காரனும் இந்நாள் பணக்காரனுமான அவன், திடீரென தன் பழைய தொழில் விசுவாசியான மோ என்பவனை தேடி அவன் ஊருக்கு போகிறான். எதற்க்காக? நாடக எழுத்தாளரின் பண்ணை வீட்டில் நடக்கும் சம்பவங்களுக்கும், மோ, கிரேமருக்கும் என்ன தொடர்பு? இந்த இரண்டு கதைகளோடு சேர்த்து பின்வரும் சம்பவங்களை இணைத்து செம த்ரில்லிங்கான நாவலை கொடுத்திருக்கிறார் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ். 1963 இல் வெளிவந்த இந்த நாவல். மிக அருமையாக, எக்காலத்துக்கும் பொருந்தும்படியாக இருந்ததை, வாசிக்கும்போதே என்னால் உணர முடிந்தது. எந்த ஒரு சம்பவத்தையும் வாசிப்பாளன் முன்பே மோப்பம் பிடிக்காதவாறு, கிரைம் த்ரில்லர் பிரியர்களுக்காக மிகவும் சிறப்பான நாவலை கொடுத்திருக்கிறார் ஜேம்ஸ். குறிப்பாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயங்கள் ஒன்றோடு ஒன்று துளியும் தொடர்பில்லாமல் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஜேம்ஸின் பல நாவல்கள் நான் வாசிப்பதற்கு வரிசையில் நிற்கின்றன. தொடர்ந்து என்ன வகையான அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் நாவலாசிரியர் கொடுக்க இருக்கிறார் என்பதையும் பார்க்க காத்திருக்கிறேன்.

மாய நிலவு - இந்திரா சௌந்தர்ராஜன்:
எனக்கு பிடித்த புத்தகங்கள் 6 - சுஜாதா & நாவல்கள் 6
ராஜமங்கலம் என்ற கிராமத்தில் பண்ணை வீட்டில் வேலை செய்யும் கணேசனுக்கு ESP பவர் இருக்கிறது (நடக்க இருப்பதை முன்பே கண்டறியும் சக்தி). அந்த ESP சக்தியால் அவனுக்கு சில விபரீதமான சம்பவங்கள் தோன்றி அது நடக்கவும் செய்ய, அதை தன் காதலியான கனகமயிலிடம் சொல்கிறான். ஆனால் அவள், அதை 'சாமி உன் மேலே வந்திருக்குயா' என்று அவனை சேவிக்க ஆரம்பிக்கிறாள். அதே சமயம், அந்த ஊரின் ரயிலடியில் கருடராஜ பட்டத்தரி என்ற கேரள மந்திரவாதியும், நாச்சியப்பன் என்ற திருட்டு தொழில் செய்பவனும் அடுத்தடுத்து வந்து இறங்குகிறார்கள். இவர்கள் எதற்க்காக ராஜாமங்கலத்திற்கு வந்திருக்கிறார்கள்? நோக்கம் என்ன? விலைமாதுவான தங்கமணியும் நாச்சியப்பனும் கூடிப் பேசி செயல்படுத்தப் போகும் திட்டம் என்ன? இவர்களுக்கும் 'ESP சக்தி' கணேசனுக்கும் நடக்கப்போகும் சம்பவங்களை தொகுத்து, அதில் நிறைய மாந்த்ரீகம், பில்லி, சூன்யம், மற்றும் ஆவி சகிதம் கலந்து கொடுத்திருக்கிறார் இந்திரா. இந்திராவின் எழுத்துக்களில் உள்ள பொதுவான சிறப்பம்சம் என்ன தெரியுமா? மனித வாழ்க்கையை ஒரு ஆத்திகவாதியின் பார்வையில் எளிதாக வாசகனுக்கு எடுத்துச் சொல்லி, 'உயிர் என்பதே ஒன்றுமில்லாத ஒன்று' என்று மிக சாதாரணமாக கூறிவிடுவார். இந்த நாவல், என்னை பொறுத்தவரை கலப்படம் இல்லாத அக்மார்க் இந்திரா ஸ்டைல் திகில் நாவல்.

கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா:
எனக்கு பிடித்த புத்தகங்கள் 6 - சுஜாதா & நாவல்கள் 7
இந்த நாவலை திரைப்படமாக சிறு வயதில் டிவியில் பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவல். அப்போதே இதை திரைப்படமாக எடுத்து கல்லா கட்டிக்கொண்டது தமிழ் சினிமா. உண்மையில் 'ஓல்டு இஸ் கோல்டு' என்பது போல இப்போதும் இந்த நாவலில் உள்ள த்ரில் கொஞ்சமும் குறையவில்லை. நாட்டுப்புற பாடல்களை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக மேம்பட்டி என்ற கிராமத்திற்கு வருகிறான் கல்யாணராமன். அந்த ஊரில் இருக்கும் வெள்ளி என்ற பெண்ணும், மருதமுத்து என்பவனும் அவனுக்கு உதவ, அந்த ஊரில் இருக்கும் ஒரு பழைய ஜமீன் பங்களாவில் தங்குகிறான் கல்யாணராமன். சில நாட்களில் ஜமீன் குடும்பத்து வாரிசாக ஸ்நேகலதா என்ற பெண்ணும் அந்த பங்களாவில் கல்யாணராமனோடு தங்குகிறாள். ஒரு இரவில் தீடீரென ஸ்நேகலதா கொலை செய்யப்பட்டு கிடக்க, அதே இரவில் வெள்ளியும் காணாமல் போகிறாள். ஸ்நேகலதாவை கொன்றது யார்? வெள்ளி எங்கே போனாள்? ஸ்நேகலதாவின் கொலைக்கும், வெள்ளி காணாமல் போனதற்கான தொடர்பு என்ன? ஜமீன் பங்களாவில் இரவில் நடக்கும் அமானுஷ்யங்கள் உண்மையா பொய்யா? என்ற கேள்விகளுக்கு மிக அழகாக, எதார்த்தமாக கதை சொல்லியிருக்கிறார் சுஜாதா. ஒரு கிராமத்து சூழலில் நல்ல த்ரில்லிங்கான கதை எழுத நிறைய கற்பனைத்திறனும், கொஞ்சம் அனுபவமும் வேண்டும். அது சுஜாதாவுக்கு கைவரக் கலந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதன் பெயரும் கொலை - சுஜாதா:
எனக்கு பிடித்த புத்தகங்கள் 6 - சுஜாதா & நாவல்கள் 8
சுஜாதாவின் ஹீரோஸ் 'கணேஷ் & வசந்தின்' துப்பறியும் கிரைம் நாவல். கணேஷின் அலுவலகத்திற்கு ஒரு போன் கால். 'என் கணவர் கதவை அடைச்சிகிட்டு வெளியே வர மாட்டேங்குறாரு' என மனைவி கதற, கணேஷும் வசந்தும் விரைகிறார்கள் அந்த வீட்டிற்கு. பிரேர்னா என்ற டிவி நடிகையின் வீட்டில் நடக்கும் இந்த சம்பவம், அவளின் கணவரான சந்திரனின் தற்கொலையில் முடிகிறது. கணவனை இழந்த அவள், திடீரென திரும்பவும் கணேஷுக்கு போன் செய்து 'இறந்த போன தன் கணவனை பார்த்ததாக' சொல்கிறாள். அந்த இரவிலேயே அவள் ஒரு கொலைப்பழிக்கும் ஆளாகிறாள். இந்த சிக்கலான மர்ம முதிச்சுக்களை கணேஷும் வசந்தும் எப்படி அவர்களுக்கே உரிய புத்திசாலித்தனத்தால் கட்டவிழ்க்கிறார்கள் என்பதே கதை. என்னை பொறுத்தவரை கணேஷ் - வசந்த் சம்பந்தப்பட்ட நாவலென்றால், ஒரு கமர்ஷியல் சினிமா பார்த்த உணர்வு நாவலை வாசிக்கும்போதே கிடைக்கும். சுஜாதாவின் இந்த சஸ்பென்ஸ் கிரைம் நாவலும் என்னை ஏமாற்றவில்லை.

மாயா - சுஜாதா:
எனக்கு பிடித்த புத்தகங்கள் 6 - சுஜாதா & நாவல்கள் 9
இதுவும் கணேஷ் வசந்தின் கதை தான். ஆனால் இது குறுநாவல். 'கிருஷ்ணா மிஷன்' என்னும் ஆஸ்ரமத்திற்கு செல்கிறார் கணேஷ். அந்த ஆஸ்ரமத்தின் மீது மாயா என்ற இளம்பெண் கற்பழிப்பு புகார் ஒன்றை கொடுத்திருக்கிறாள். அதை விசாரித்து உண்மை யார் பக்கம் இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே இந்த நாவலின் கதை. 'சாவி' ஆசிரியராக இருந்த தினமணிக் கதிரில் வெளிவந்தது இந்த கதை.ஆசிரமம், ஹைடெக் சாமியார், பாலியல் புகார் தரும் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்தும் கதை. ஆனால் ரொம்ப 'சூப்பர் பாஸ்ட்டாக' நாவல் படித்து முடித்ததால் கொஞ்சம் வருத்தம் எனக்கு. 'உண்மையில் என்னைப்போன்ற 'யானைப்பசி' வாசிப்பாளனுக்கு இந்த குறுநாவல் ஒரு 'சோளப்பொரி'.

கமர்ஷியல் கிக்:

ஒரு முறை நடிகர் சிவகார்த்திகேயனை பற்றி கூகுளில் துழாவிக் கொண்டிருந்தபோது சிக்கியது இந்த பாடல். கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் படமான 'வஜ்ரகாயா' என்ற படத்தில் வரும் ஓப்பனிங் பாடலான இதில், தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன், தெலுங்கு நடிகர் ரவி தேஜா, மலையாள நடிகர் திலீப் மற்றும் கன்னட நடிகர் ரவிச்சந்திரனோடு சிவ ராஜ்குமார் ஆடியிருக்கும் இந்த பாடல், கமர்ஷியல் குத்து பாடல்களை விரும்புகிறவர்களுக்கு ஏற்றது போல கேட்பதற்கும், பார்ப்பதற்கும் நன்றாகவே இருக்கிறது. அதே போல இந்த பாடலில் வரும் ஐந்து ஹீரோக்களில் ரவி தேஜா மட்டும் தனித்து தெரிவது தான் அவரின் 'Screen Presence' எந்த அளவுக்கு பவர்புல்லாக இருக்கிறது என்பதை இந்த பாடலை பார்க்கும்போதே தெரிந்து கொள்ளலாம்.




Thanks and Regards,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக