செவ்வாய், மார்ச் 08, 2011

பாரதிராஜாவின் '16 வயதினிலே' - திரைவிமர்சனம்

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ஸ்டுடியோ தளத்தில் இயங்கிகொண்டிருந்ததை யாரும் இன்று மறந்திருக்க மாட்டார்கள். எடுக்கும் படங்கள் கிராமம், நகரம் என்று எந்த வகையறாவாக இருந்தாலும் சரி, அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்டுடியோவில் தான். தமிழ் சினிமா கொஞ்சம், கொஞ்சமாக ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,
அல்லி நகரத்து இளைஞன் ஒருவன் எடுத்த படம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. அந்த படமே '16 வயதினிலே'.

ஒரு சாதாரண கிராமம். அதில் பெட்டிக்கடை வைத்து பிழைக்கும் ஒரு 16 வயது பெண்ணின் அம்மா. பத்தாவது பாசான பிறகு டீச்சராக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் அந்த 16 வயது பெண். அந்த ஊரில் உள்ள அனைவரும் சொல்லும் வேலைகளை செய்யும் அப்பாவியான ஒருவன். அதே ஊரில் வம்பு பேசி, ஊர் வம்பை வளர்க்கும் ஒருவன். இந்த மூன்று கதாபாத்திரங்களை கொண்டு பின்னப்பட்ட கதையை, அழகான கிராம பின்னணியில் எடுத்திருக்கிறார் 'இயக்குனர் இமயம்' பாரதி ராஜா.
மூக்கில் வளையம், முகத்தில் ஒரு அப்பாவித்தனம், விந்தி நடக்கும் நடை. இது தான் கமல் ஏற்றிருக்கும் 'சப்பாணி' கதாபாத்திரம். இந்த படத்தின் ஸ்டில்களை பார்த்து கமலின் அண்ணன் சாருஹாசன் சற்று கோபமடைந்து பாரதிராஜாவிடம் சண்டை போட்டார். Because அவர் பார்த்தது கமல் கோமனதொடு இருக்கும் ஸ்டில்லை தான். அப்போது கமல் காதல் மன்னனாக சினிமாவில் உலா வந்து கொண்டிருந்த நேரம். பின்பு படத்தின் வெற்றியையும், கமலின் நடிப்பையும் பார்த்து அவர் அண்ணன் சமாதானமானார். நம்மூரில் நம்முடனே வலம் வரும் சில அப்பாவிகளின் பிரதிபலிப்பே இந்த சப்பாணி வேடம். அதற்கு உயிர் கொடுத்து சிறப்பாக நடித்தது கமலின் திறமை. ஒரு ஓணானை கூட கொல்ல கூடாதென சொல்லும் அவன், பின்னர் கொலைகாரனாக மாறும் போது அந்த கதாபாத்திரத்தின் நியாயத்தை நம்மால் மறுக்க முடியாது. 'like you' என்று மயில் தன்னை தான் சொன்னாள் என்று நினைத்து குதுகலிக்கும் அந்த காட்சி, கமல் கமல் தான் என்று நிருபித்திருப்பார் படத்தில்.

'ஆத்தா நான் பத்தாம் கிளாஸ் பாசாகிட்டேன்' என்று வரப்பு மேல் ஓடிவரும் 'மயில்' கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி. 'ஆசை, தோசை, அப்பளம், வடை' என்று கமலிடம் சொல்லும் அழகின் திமிரும், வெகுளித்தனமாகவும் கலந்த பெண்ணாகவும், பின்பு குடும்ப பொறுப்போடும், தன்மானத்தோடு வாழ நினைக்கும் பெண்ணாகவும் அசத்தியிருக்கிறார். ஒரு கிராமத்து பெண்ணின் உணர்வுகளை நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஒரே ஒரு வருத்தம். ஸ்ரீதேவி போன்று அழகோடும், சிறந்த நடிப்போடும், குறிப்பாக சொந்த குரலோடு பேசக்கூடிய நடிகை இப்போது இல்லையே என்ற ஏக்கம் தான்.

பொதுவாக எல்லா ஊரிலுமே வெட்டி நியாயம் பேசிக்கொண்டும், ஊர் வம்பை வாங்கிக்கொண்டும் ஒருவர் வாழ்ந்து கொண்டே இருப்பார். அப்படி ஒரு வேடம் தான் ரஜினிக்கு. பரட்டையாக ரஜினிகாந்த் கலக்கியிருப்பார் இந்த படத்தில். என்னை பொறுத்தவரை இந்த படத்தின் வில்லன் ரஜினி என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதர்களின் குணங்களும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டிருக்கும். ஒருவருக்கு நல்லவராக தெரியும் நாமே, மற்றவர்க்கு கெட்டவராக தெரியலாம். அது போல தான் இந்த படத்தில் ரஜினியும். இந்த படத்தில் ரஜினி வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமை. குறிப்பாக, திருவிழாவில் பாவாடை தாவணியில் இருக்கும் ஸ்ரீதேவியை பார்த்து 'இந்த தாவணியை அவ அம்மா போட்டாலும் நல்ல தான்டா இருக்கும், இதெப்படி இருக்கு?' என்று கேட்கும் போது 'சூப்பர் தலைவா' என்றே சொல்ல தோன்றுகிறது. அது மட்டுமல்ல, ஒரு காட்சியில் கமலை கூப்பிடும்போது 'டேய் சப்பாணி, டேய்' என்று ஒரு சவுண்ட் விடுவார் பாருங்கள். சான்சே இல்ல தலைவா, பின்னிடிங்க.

ஸ்ரீதேவி அம்மாவாக காந்திமதி நல்ல நடிப்பு. டாக்டராக வரும் சத்யஜித் நல்ல தேர்வு. இந்த படத்தில் நடித்த அனைவரும் அவரவரது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் நிவாஸின் கேமரா 'செந்தூரபூவே' பாடலில் தனியாக தெரிகின்றது. இசைஞானி இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் நம்மோடு இன்றும் கலந்திருக்கிறது. இந்த படத்தை எழுதி, இயக்கியது பாரதிராஜா. இது இவரின் முதல் படமும் கூட. ஒரு ஒரிஜினல் கிராமத்தை முதன்முதலில் தமிழ் சினிமாவிற்கு காட்டிய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. படத்தை தயாரித்தது S.A. ராஜ்கண்ணு.

இந்த படம் 15 செப்டம்பர் 1977 அன்று வெளியானது. மதுரை மிட்லேன்ட் தியேட்டரில் 200 நாட்களும், சினிப்ரியா தியட்டரில் 240 நாட்களும் ஓடி வசூலில் பெரும் சாதனை படைத்தது. படத்தை பார்த்த பாலச்சந்தர் 'படத்தை இயக்கிய பாரதிராஜாவின் காலில் விழவேண்டும்' என்று கூறினார். இந்த படத்தில் நடித்த இரண்டு பேர், பின்னாளில் பெரும் பிரபலமானார்கள். ஒன்று பாக்யராஜ், மற்றொருவர் நம்ம காமெடி கலக்கல் கவுண்டமணி. இந்த படத்தில் வரும் 'செந்தூரப்பூவே' பாடலுக்காக S. ஜானகிக்கு 'சிறந்த பின்னணி பாடகிக்கான' தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தை தெலுங்கில் சந்திரமோகன், மோகன்பாபு, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்து 'பதஹரேள்ள வயசு' என்ற பெயரில் வெளியானது. இன்றைக்கு சினிமாவில் இருக்கும் அணைத்து துணை இயக்குனர்களுக்கு இது போல ஒரு படம் பண்ணவேண்டும் என்று நினைத்தால், அது கண்டிப்பாக '16 வயதினிலே'வாக தான் இருக்கும்.












(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

5 கருத்துகள்:

  1. பெயரில்லா13 ஏப்ரல், 2011 22:35

    Nalla Vimarsanam, padam ippo parhta mathiri eluthininga

    thanks

    பதிலளிநீக்கு
  2. idhu appavae hindila remake pannanga Bharathi raja than direction , Sridevi, amol palekar and kulbhushan karbanda nadichi vanthuchi but failure movie

    பதிலளிநீக்கு
  3. கங்கை அமரன் "செந்தூர பூவே" என்ற பாடலை எழுதி பாடலாசிரியராக இந்த படத்தில் தான் அறிமுகமானார்.

    பதிலளிநீக்கு