செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

எனக்கு பிடித்த புத்தகங்கள் 8 - சுஜாதா நாவல்கள் மற்றும் புத்தகத் திருவிழாவில் வாங்கியவை...

பதவிக்காக:
சில நாட்களுக்கு முன்பு இந்த நாவலை நான் படித்தபோது சுஜாதாவுக்கும் நாஸ்ட்ரடாமஸ்க்கும் என்ன விதமான மரபிய உறவு இருந்திருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன். நான் அப்படி நினைப்பதற்கான 'காரண' கதையையும் சொல்கிறேன். தனபால் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. ஆட்சியில் இருக்கும் பிரதான கட்சியில், யார் மெஜாரிட்டி? என்ற யுத்தம், ஒரு கட்டத்தில்
சட்டசபையை கலைத்து விடுகிறது. இதற்க்கு நடுவில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள், அவளிடம் இருக்கும் டேப்பில் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவரின் அந்தரங்க படங்கள். தன்ராஜுக்கு தன் முன்னாள் காதலியுடன் கள்ளஉறவு என கொஞ்சம் இடியாப்ப சிக்கல் கதையாக இருந்தாலும், எந்த இடத்திலும் குழப்பாமலும், ஓவராக சுத்தாமலும் கதையை சரியாக கொண்டு செல்கிறார் சுஜாதா. அரசியல் சம்பந்தப்பட்ட இடங்களில் அப்படியே இன்றைய ஆளும்கட்சியின் சம்பவங்களை நினைவூட்டுகிறது. குறிப்பாக கூவத்தூர் போலவே இங்கு கொடைக்கானல், மத்திய அரசின் சிபாரிசு, ஆளுநர் சந்திப்பு என அன்றே இது போல எதிர்காலத்தில் நடக்கலாம் என்று எழுதியிருப்பாரோ சுஜாதா என்றே எனக்கு தோன்றியது.

விக்ரம்:
விக்ரம் படத்திற்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் விக்ரம் படத்திற்கான கதையை தேர்ந்தெடுத்தது சுஜாதா எழுதிய 'விக்ரம்' நாவலில் இருந்து தான். திரைவடிவில் விக்ரம் பார்த்ததால் ரொம்ப நாளாக அதை எழுத்து வடிவில் படிக்கும் ஆர்வம் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் தான் படித்தேன். படத்திற்கும் நாவலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், படத்தில் பார்த்த பல காட்சிகள் நாவல் வடிவில் படிக்கும் போது மனதில் அதே காட்சிகள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. படத்தின் நீளம் கருதி நாவலில் இருந்த சில காட்சிகளை கமல் எடுக்காமல் விட்டதை படித்தபோது படத்தில் நடித்த நடிகர்களின் முகங்களே மனதில் வந்து போகிறது. ஆனாலும் இது சுஜாதாவின் அருமையான நாவல் என்பது மறுப்பதற்கில்லை.

பூக்குட்டி:
குழந்தைகள் உலகம் என்பது எந்தவிதமான போலி கட்டமைப்புக்குள் அடக்கமுடியாத அழகான உலகம். அதை படம் பிடிப்பதோ அல்லது கதை புனைவதோ மிகவும் சவாலான காரியம். ஆனால் அதையும் தன் அழகான நடையாலும், யதார்த்தமான கதையாலும் சிறப்பாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. விம்மு, பணக்கார பெற்றோருக்கு பிறந்து, கான்வென்டில் படிக்கும் பங்களா குழந்தை. பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் 'குப்பத்து' வேலாயியும் அவள் வளர்க்கும் 'பூக்குட்டி' என்ற நாய் குட்டியும் விம்முவிற்கு அறிமுகம் ஆகிறார்கள். இருவரும் நட்பு பாராட்டினாலும் ஸ்கூல், வீடு என்று எல்லோரும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை சொல்லி இருவரையும் பிரிக்கிறார்கள். இந்த பிரிவு விம்முவை என்ன செய்கிறது? விம்முவும் வேலாயியும் பின்னர் சந்தித்து இணைந்தார்களா என்பதே 'பூக்குட்டி' நாவலின் கதை.

மெரினா:
பணக்கார இளைஞன் திலீப்பும் அவனின் நண்பர்களும் ஒரு இரவு நேரத்தில் மெரினாவில் உலாவும்போது, நண்பர் என நினைத்து ஒருவனை 'விளையாட்டாக' அணுக, அது கைகலப்பில் முடிகிறது. மயக்கமுறும் அவனை 'இறந்து விட்டானே' என நினைத்து அங்கிருந்து ஓடுகிறார்கள் திலீப்பும், நண்பர்களும். அடுத்த நாள் காலையில் கடற்கரையில் கொலை நடந்தது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஒருவர் திலீப் வீட்டிற்கு வருகிறார். கொலையை தான் மறைக்க உதவுவதாகவும், அதற்க்கு சில லட்சங்கள் லஞ்சமாக கேட்கிறார். நண்பரின் ஆலோசனையின் பேரில் திலீப்பின் அப்பா இந்த விஷயத்தை கணேஷ் வசந்த்திடம் கொண்டு போக, களத்தில் இறங்குகிறார்கள் இந்த 'குரு, சிஷ்யர். உண்மையில் கொலையானவர் யார்? தாமாக முன்வந்து கொலையை மறைக்க பணம் கேட்கும் அதிகாரியின் திட்டம் என்ன என்பதை மிக அருமையாக துப்பறிந்து சொல்லியிருக்கிறார் சுஜாதா. 'இது ஏதோ கடற்கரை சம்பந்தப்பட்ட கதை' என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால், இது வேற ஏரியா என்பதை சொல்லி ஆச்சர்யம் அளிக்கிறார் சுஜாதா.

24 ரூபாய் தீவு:
தின ஒளி பத்திரிக்கை இளம் நிருபர் விஸ்வநாத். திடீரென்று அலுவலகத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. 'என்னிடம் ஒரு முக்கிய பிரமுகரை பற்றிய அந்தரங்கங்கள் நிறைந்த செய்திகள் இருக்கிறது. நேரில் வந்தால் தருவென்' என்கிறாள் லதாங்கி என்கிற பெண். போன இடத்தில் அந்த பெண் இறந்து கிடப்பதை கண்டு போலீசில் தகவல் கொடுக்கிறான் விசு. போலீஸ் 'அவள் தற்கொலை செய்து கொண்டாள்' என்று சொல்லி வழக்கை முடிக்கிறது. அதே சமயம் அங்கிருந்த ஒரு டைரியை எடுக்கும் விசு, அதை தவறுதலாக டாக்சியில் விட்டுவிடுகிறான். அதே சமயம் லதாங்கி உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டாளா இல்லை கொலையா என்ற ரீதியில் ஒரு தொடர் கட்டுரையை 'தின ஒளியில்' எழுத ஆரம்பித்து அதை பற்றி தகவல் திரட்ட ஆரம்பிக்கிறான் விசு. இந்த கட்டுரையால் மாநிலத்தில் ஆட்சி மாற்றமே நடக்கிறது. அதே சமயம் டாக்சியில் தொலைத்த லதாங்கியின் டைரியை பற்றி பல பேர், பல வழிகளில் அவனை நெருக்குகிறார்கள். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அந்த கட்டுரையை எழுத அவனுக்கு தடை விதிக்கிறார்கள். வேலை போகிறது, அவனின் தங்கை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறாள், ஜெயிலுக்கு போகிறான் என பல இன்னல்கள். கடைசியில் அந்த டைரி கிடைத்ததா? அந்த டைரிக்காக அவனை துரத்தும் அந்த நபர் யார்? அந்த '24 ரூபாய் தீவு' என்ற டைரியில் புதைந்திருக்கும் செய்திகள் என்ன? என்பதை திரும்பவும் சூப்பராக சொல்லி முடித்திருக்கிறார் சுஜாதா. ஏற்கனவே படித்த 'பதவிக்காக' நாவலில் வரும் சில சம்பவங்கள் இதில் வந்தாலும், கதையின் முக்கிய போக்கை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. கௌரவ தோற்றமாக கணேஷ் - வசந்த். சுஜாதாவின் சிறப்பே முக்கிய கதையில் கிளைக்கதைகளை மிக அழகாக இடம் பெற வைத்து, முக்கிய திருப்பத்தில் அதை மெயின் கதையோடு இணைக்கும் லாவகம் சுஜாதா ஸ்பெஷல். அது இதிலும் மிஸ்ஸாகவில்லை.

நில்லுங்கள் ராஜாவே:
மனோதத்துவ கதைகள் என்பது அவ்வளவு சாதாரண கதை களம் அல்ல. அதற்க்கு கூடுதல் கடின உழைப்பு தேவைப்படும். ஆனால் அந்த ஏரியாவில் 'சுஜாதா' கில்லி என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த கதையை சுருக்கமாக சொல்வதே கடினம். அதனால் இதை படித்து மகிழுங்கள். இதுவும் கணேஷ் வசந்தின் துப்பறியும் நாவல். அதே சமயம் அதிகம் மருத்துவ பெயர்கள் இடம் பெறாத சுஜாதாவின் சுவாரஸ்ய நாவல் இது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு:
நரேந்திரன் என்ற மருத்துவரின் வழக்கு நீதி மன்றத்திற்கு வருகிறது. தன் தொழில் மூலமாக மூன்று முக்கிய தவறுகளை செய்த குற்றத்திற்கான  வழக்கில் நரேந்திரனின் சார்பாக ஆஜராகிறார்கள் கணேஷும் வசந்தும். அதே சமயம் நரேந்திரனும் 'நான் தான் அந்த தவறுகளை செய்தேன். எனக்கு தண்டனை வழங்குங்கள்' என்கிறார். அவை என்னென்ன தவறுகள், டாக்டருக்கு எதிரான வாத, பிரதி வாதங்கள் என தெளிவான நாடக பாணியில் எழுத்து நாவலை தந்திருக்கிறார் சுஜாதா. நாவலின் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை பல. டாக்டர் செயலில் உள்ள நியாயங்கள் என்பதை தவிர்த்து, பணமும், அரசியலும் பாதாளத்தையும் தாண்டி நீதித்துறையின் மீதும் பாயும் சம்பவங்கள். அதே போல சுத்த யோக்கியனுக்கு இந்த சமூகத்தில் வாழ வழியில்லை என்பதையும் மிக நாசுக்காக சொல்லியிருக்கிறார் சுஜாதா. ஐ ரியலி லைக் திஸ் ஸ்டேஜ் பிலே நாவல்.

ஜூலியஸ் சீசர் - எஸ். எல். வீ. மூர்த்தி:
Hail! Caesar. ரொம்ப நாள் கழித்து ஒரு Biography புத்தகம் படித்தேன், குறிப்பாக சீசர். வரலாற்றில் அலெக்சாண்டர், நெப்போலியன், செங்கிஸ்கான் வரிசையில் சீஸருக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. சீசர் ஒரு போர் தளபதி மட்டுமல்ல, சிறந்த நிர்வாகி, தேர்ந்த தந்திரி, அழகு காதலன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தன்னை பணயமாக பிடித்துக்கொண்ட கடற்கொள்ளையரிடம், 'நான் யார் தெரியுமா? பணய தொகையை அதிகமாக கேளு' என சொல்லி அந்த இடத்திலேயே சில நாட்கள் தங்கி, பின்பு அவர்களையே அடித்து விரட்டி அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு Pirates என்ற வார்த்தையே கடலில் இல்லாமல் செய்தவர், எதையும் அடிப்படையின் ஆழத்தில் ஆராய்ந்து தீர்வு கண்டவர், தன் நண்பர்களின் சூழ்ச்சியால் அவர்களின் கைகளாலேயே கொலையானது கொடூரத்தின் உச்சம். திரு. மூர்த்தி அவர்களின் இந்த புத்தகம் எந்த ஒரு இடத்திலும் தோய்ந்து நிற்காமல், விறுவிறுப்பாக, நிறைய ரோம சாம்ராஜ்யத்தின் அறிய தகவல்களோடு சொல்லியிருக்கிறார். இன்னும் தொடர்ந்து பல சீசர் தொடர்பான புத்தகங்களை படிக்க ஆவலை தூண்டியிருக்கிறது இந்த 'ஜூலியஸ் சீசர்'.

மாஃபியா ராணிகள் - கே. என். சிவராம்:
'எல்லா துறைகளையும் போல மாபியா உலகிலும் ஆண் ஆதிக்கம் இருக்கிறது. ஆனால் அதிலும் மற்ற துறைகளைப்போல சில பெண்மணிகள் தனியாக தெரிகிறார்கள். அவர்களை பற்றிய புத்தகம் தான் இது' என்று இந்த புத்தகத்தை நம்பி வாங்கி, படித்து மோசம் போனவர்களில் நானும் ஒருவன். போலீஸ் இன்போர்மர் ஜெனாபாய், 'காமாத்திபுரா' கங்குபாய் மற்றும் கணவனின் கொலைக்காக பழிவாங்க புறப்பட்ட அஸ்ரப் என்ற மூன்று பெண்களை பற்றிய கதைகளே இந்த நாவலின் சாராம்சம். ஆனால்  50 பக்கங்களுக்கு மட்டுமே வரக்கூடிய இவர்களின் கதையை தாவூத்தின் கதையோடு சேர்த்து 550 பக்கங்களுக்கு எழுதி முடித்திருக்கிறார் எழுத்தாளர் திரு. சிவராமன். தங்கத்தில் கொஞ்சம் செப்பு கலக்கலாம், ஆனால் செப்பில் துளியூண்டு தங்கத்தை கலந்தது போல இருந்தது புத்தகம். போதாக்குறைக்கு பயங்கர சினிமாட்டிக் வர்ணனைகள் வேறு, அடிக்கடி வந்து எரிச்சலூட்டின. சில, பல விஷயங்கள் தெளிவாக, விரிவாக எழுதியிருந்தாலும் அதை நீட்டி முழக்கி சொன்ன விதம் தான் கடுப்பேற்றியது. புத்தகத்தை படித்த பிறகு எழுதியவரை பற்றிய என் மைண்ட் வாய்ஸ் - 'உன்னையெல்லாம் யார்யா எழுத சொன்னா, யாரு எழுத சொன்னா?'

டாங்கிரி டு துபாய் - எஸ். ஹுசைன் சேத்தி (தமிழில் கார்த்திகா குமாரி):
இந்த புத்தகம் ஆங்கில பதிப்பாக வெளிவந்த போதே படித்திருக்க வேண்டியது. ஆனால் நேரமும், பொறுமையும் போதிய அளவு இல்லாத காரணத்தால் தமிழில் படிக்கும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. தாவுத் இப்ராஹிம், இன்டர்போல் தேடும் சர்வதேச குற்றவாளி, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதி, மொத்தத்தில் இன்டர்நேஷனல் டான். ஒரு நேர்மையான கான்ஸ்டபிள் மகன், ஏழ்மையான, கௌரவமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் இன்று சர்வதேச மாபியா உலகத்தையே தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பது முரணான விந்தை. 1940 களில் இருந்து மாபியா உலகம் உதயமானது முதல் வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான், கரீம் லாலா போன்றவர்கள் வளர்ந்து பம்பாயின் விருட்சங்களான கதை, பின் தாவூதின் வருகை, படிப்படியான வளர்ச்சி, பின்பு கடத்தல், காதல், கொலை, துரோகம், பழிவாங்கல், நட்பு, விசுவாசம், தொழிலில் புது யுக்திகள் என மும்பையில் ஆரம்பித்து துபாய், பாகிஸ்தான் என கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது கதை. ஆனால் அனைத்தும் நடந்த சம்பவங்கள் என்று நினைக்கும்போது சற்று ஆச்சரியமாகவே இருக்கிறது. புத்தகம் வெறும் தாவூத்தை சுற்றியே சுழலாமல் மற்ற பல தாதாக்களை பற்றியும் நிறைய சம்பவங்களை சொல்லியிருக்கிறது. ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவலை படித்து கொலைக்கான திட்டம் போட்ட மான்யா சர்வே, தையல் இயந்திரம் திருடிய படா ராஜன், தன்னையே ஒரு சினிமா ஹீரோ போல பாவித்த அபு சலீம் என சுவாரஸ்யம் கொஞ்சமும் குறையாமல் நம்மை படிக்க வைக்கிறது ஹுசைன் சைத்தியின் எழுத்துக்கள். ஆனால் ஒன்று. மனிதனுக்கு அடிப்படை தேவையான உணவு எந்த இடத்தில் தட்டுப்பாடாக இருக்கிறதோ, அந்த இடம் தான் குற்றம் நடத்தப்படுவதற்கான ஆரம்பப்புள்ளி.

கமெர்ஷியல் கிக் - ஸ்மைல் சேட்டை:


இன்றைக்கு சினிமா விமர்சனம், ட்ரைலர் விமர்சனம், டீசர் விமர்சனம் என்று கண்டமேனிக்கு பலர் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். காலம் போகும் வேகத்தில் நின்று, நிதானமாக விமர்சனங்களை படிக்க முடியவில்லை என்பதே உண்மை. அப்படியே படித்தாலும் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் மொக்கையாகவே விமர்சனம் செய்கிறார்கள் அல்லது பணம் வாங்கி கொண்டு விமர்சிக்கிறார்கள். அந்த 'ஒரு சில' நல்ல விமர்சகர்களில் ஸ்மைல் சேட்டை விமர்சனம் கண்டிப்பாக ரசிக்க வைக்கிறது. இது போன்ற டம்பஸ்ட் விமர்சனத்தில் வீடியோ ஓடும் நேரமும் கம்மி, படத்தை பற்றிய பார்வையும் தெளிவாய் புரிய வைக்கிறார்கள் ஸ்மைல் சேட்டை குழுவினர். முக்கியமாக அதை வலிக்காமல், சிரிக்க வைத்து சொல்லும் சட்டையர் வகை அருமை.





Thanks and Regards,


1 கருத்து:

  1. 'இருள் வரும் நேரம் ' என்ற சுஜாதாவின் ஒரு வித்தியாசமான ,அற்புதமான நாவல்.

    பதிலளிநீக்கு