வியாழன், ஜூன் 15, 2017

எனக்கு பிடித்த புத்தகங்கள் 7 - சுஜாதாவின் 'கணேஷ் மற்றும் வசந்த்' ஸ்பெஷல்...

கணேஷ் - வசந்த், சுஜாதாவின் வாசகர்களுக்கு மிகவும் பரிட்சயமான பெயர்கள். நான் சுஜாதாவின் நாவல்களை படிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரின் ஆஸ்தான கதாநாயகர்களான கணேஷும் வசந்தும் என்னுடைய Favorite ஹீரோக்கள் ஆகிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
கணேஷின் அதட்டலாக சீரியஸ் பேச்சு, வசந்தின் ஜொள்ளு மற்றும் விளையாட்டுத்தனம் என்று இருவரின் குணங்களும் வெவ்வேறாக இருந்தாலும் புத்திசாலித்தனமான அணுகுமுறை, துப்பறியும் திறன், முக்கியமாக சட்டத்தின் ஒவ்வொரு விதிகளையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு இவர்கள் அதை தக்க சமயத்தில் உபயோகிக்கும் அந்த சாமர்த்தியம் என்று இந்த இரு கதாபாத்திரங்களையும் மிக அருமையாக வடிவமைத்திருக்கிறார் சுஜாதா. இந்த பதிவின் ஸ்பெஷல், அவர்கள் பங்கேற்ற துப்பறியும் நாவல்களை பற்றி இங்கே எழுதியிருக்கிறேன். அதே சமயம், சுஜாதாவின் மற்ற சில நாவல்களையும் சொல்லியிருக்கிறேன். 90'களில் சுஜாதாவின் கணேஷ் வசந்த் நாவல்களை டிவி தொடராக வெளிவந்ததாக கேள்விப்பட்டேன். இன்றைய ட்ரெண்டில் கணேஷ் வசந்த் துப்பறியும் கதைகளை படமாக எடுக்கலாம். அப்படி எடுக்கும் பட்சத்தில் கணேஷாக தல அஜித்தும், வசந்த்தாக சிவகார்த்திகேயனும் நடித்தால் கலக்கலாக வரும் என்பதே என் எண்ணம். 

யவனிகா:
ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்கதை, பின்பு புத்தகமாக வடிவம் பெற்றது. கௌரி என்ற பெண் கணேஷ், வசந்த்திடம் ஒரு சிலையை காணவில்லையெனவும், அதை கண்டுபிடித்து தரும்படியும் கூறுகிறாள். அது தான் யவனிகா என்ற ஐம்பொன் சிலை. மிகவும் விலை மதிப்புள்ள சிலையை ராஜ செல்லையா என்பவர் தன் பிரைவேட் கலெக்க்ஷனில் வைத்து பராமரிக்கும்போது திருடு போக, அதை தேடி கிளம்புகிறார்கள் கணேஷும் வசந்தும். திடீரென ஒரு நாள் அந்த சிலை கிடைத்து விட்டது என்று சொல்கிறார் ராஜ செல்லையா. அரசாங்கத்துக்கே தெரியாமல் பராமரிக்கும் அந்த சிலையை திருடியது யார்? திரும்ப கிடைத்தது எப்படி? உண்மையில் கிடைத்துவிட்டதா? என்று இருவரும் ஆராய அது துப்பாக்கி, அமெரிக்கன் டாலர்ஸ் என்று உலக அளவில் விரிகிறது கதை. இதற்க்கு நடுவில் வசந்தின் 'ஜொள்ளு' தேவைக்கு தேஜோமயி என்ற நடிகையின் கிளை கதை வேறு. அந்த கிளைக்கதையையும் ஒரு முக்கிய கட்டத்தில் மெயின் கதையோடு இணைத்தது சுவாரஸ்யம். வழக்கம் போல சுஜாதாவின் மேஜிக்கல் விறு விறு கதை.

ஆயிரத்தில் இருவர்:
சமையலறையில் தீ விபத்தில் இறந்துபோன தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், தன் மகளை, ஐ.ஏ.எஸ் அதிகாரியான தன் மருமகனின் குடும்பத்தார் கொன்றுவிட்டார்கள் என்று சொல்லி உதவிகேட்டு வருகிறார்கள் ஒரு பெரியவரும், அவரின் இளைய மகளும். வழக்கை எடுத்துக்கொண்டு விசாரிக்கும் கணேஷும் வசந்த்தும், ஒரு கட்டத்திற்கு மேல் 'இது வெறும் வரதட்சணை கொடுமை அல்ல, அதையும் தாண்டிய தேசிய பிரச்சனை இதில் இருக்கிறது' என்று யூகிக்கிறார்கள். அது என்ன என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார் சுஜாதா. வழக்கம் போல ஸ்வாரஸ்யங்களும் சாகசங்களும் நிறைந்த கணேஷ் வசந்தின் அக்மார்க் துப்பறியும் கதை. சில இடங்களில் கொஞ்சமே கொஞ்சம் போர் அடித்தாலும் ரசிக்க வைக்கிறார்கள் இந்த 'ஆயிரத்தில் இருவர்'கள்.

ஐந்தாவது அத்தியாயம்:
இந்த கதை 2000-இல் குமுதத்தில் தொடராக வெளிவந்தது. 'மயா' என்ற பத்திரிக்கையில் 'ஐந்தாவது அத்தியாயம்' என்ற கதையில் நடக்கும் சம்பவங்களை போல தனக்கு நடப்பதாக சொல்லி கணேஷிடம் உதவி கேட்டு வருகிறாள் அபூர்வா என்ற திருமணமான பெண். 'தன் வாழ்க்கையில் நடப்பது தத்ரூபமாக அந்த தொடர்கதையில் வருவதாகவும், குறிப்பாக ஐந்தாம் அத்தியாயத்திற்குள் தன்னை கொல்லப்போவதாக அந்த கதையில் குறிப்பிட்டிருப்பதை சொல்லி உதவி கேட்கிறாள். கணேஷும் வசந்தம் இது சம்பந்தமாக துப்பறிய ஆரம்பிக்க அதை உண்மையில் எழுதுபவர் யார், அபூர்வாவிற்கும் அந்த கதைக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்பதை விறுவிறுப்பான நடையில் மிக அருமையாக கதை சொல்லியிருக்கிறார் சுஜாதா. குறிப்பாக கதையின் முடிவில் கணேஷ் டிக்டேட் செய்ய, அபூர்வா எழுதும் அந்த லெட்டரை கொண்டு கதையை முடித்திருப்பது சுவாரஸ்யம். 

விபரீத கோட்பாடு:
'இவரது மனைவியிடமிருந்து இவருக்கு விவாகரத்து வேண்டும், காரணம், இவரை நான் காதலிக்கிறேன்' என்று சொல்லி கணேஷிடம் வருகிறார்கள் சாமிநாதனும், தருணா என்ற பெண்ணும். விவாகரத்து வழக்குகளை எடுப்பதில்லை என்று சொல்லும் கணேஷிடம், சாமிநாதனின் மனைவி ப்ரதிமா வேறொருவருடன் ஓடிவிட்டதாகவும், முறைப்படி விவாகரத்து பெற்றால் தான் எங்களால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று சொல்லி தங்களுக்கு உதவுமாறு கேட்க, கணேஷும் வசந்தம் களத்தில் இறங்குகிறார்கள். ப்ரதிமா எங்கே என்ற தேடலில் வெற்றி கிடைத்து கிட்டத்தட்ட அவளை நெருங்கும் வேளையில், அவள் கொலை செய்யப்படுகிறாள். இந்த கொலை எதனால் நடந்தது? இதன் பின்னணி என்ன என்பதை நிதானமாக அணுகும்போது நம்பமுடியாத முடிச்சுக்கள் அவிழ்கின்றன. அது என்ன, எப்படி என்பதை மிக அழகாக, விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் சொல்லியிருக்கிறார் சுஜாதா.

சில்வியா:
இந்த கதை ஒரு குறுநாவல் தான். ஆனந்த விகடனில் முன்பு வெளிவந்தது. நாராயண் என்ற பெரிய தொழிலதிபரின் மகள், லட்சுமி (எ) சில்வியா. இவர் கணேஷ், வசந்த்திடம் தன் மகளுக்கு கொஞ்சம் மனப்பிரச்சனை இருப்பதாகவும், அவளோடு பேசி, அவளின் மன ஓட்டம் என்ன என்பதை தனக்கு சொல்லுமாறு கூறுகிறார். பேசியபிறகு அவள் புத்திசாலி பெண்ணே தவிர மனக்குழப்பங்கள் இருப்பதாக தெரியவில்லை என சொல்ல நினைக்கும் வேளையில் சில்வியா தற்கொலை செய்து கொள்கிறாள். தற்கொலை செய்யவேண்டிய அளவுக்கு சில்வியாவுக்கு இருந்த பிரச்சனைகள் என்ன? இது உண்மையிலேயே தற்கொலை தானா, அல்லது தற்கொலையாக ஜோடிக்கப்பட்டதா என்பதை கணேஷும் வசந்தும் துப்பறிவதே இந்த நாவல். சம்பவங்களுக்கான காரணங்களை எக்காலத்திற்கும் பொருந்தும்படி சொல்வதே சுஜாதாவின் சிறப்பு. அந்த சிறப்பு இதிலும் சோடை போகவில்லை.

மேகத்தை துரத்தினவன்:
அப்பா அம்மா இல்லாத அன்பழகன் தன் சித்தப்பா வீட்டில் வளர்பவன். வீட்டு வேலைகள் செய்வதில் இருந்து அனைத்துக்கும் சித்தப்பாவிடம் அண்டி நிற்கும் அவலமான வாழ்க்கையை வெறுக்கும் அவனுக்கு மாணிக்கம் நண்பனாகிறான். மாணிக்கத்தின் பகட்டுக்கும் பேச்சுக்கும் மயங்கி பணம் கொள்ளையடிக்க ஒப்புக்கொள்கிறான் அன்பு. அதுவும் தன் சித்தப்பா மேலாளராக வேலை செய்யும் வங்கியில். மாணிக்கத்தின் திட்டத்துக்கு செவி சாய்த்து, அதை சரியாக செயல்படுத்தி, பின்பு பணத்தையும் கொள்ளையடிக்கிறார்கள் இருவரும். அந்த நேரம் பார்த்து போலீஸ் வர, நிலைமை மொத்தமாக மாறுகிறது. அன்பழகனை முதல் குற்றவாளியாகவும், மாணிக்கத்தை இரண்டாம் குற்றவாளியாகவும் பாவித்து இருவருக்கும் முறையே 7 ஆண்டும் மற்றும் 3 ஆண்டும் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது கோர்ட். இந்த கொள்ளையின் உண்மையான குற்றவாளி யார்? என்பதை கடைசி 15 பக்கங்களில் வந்து துப்பறிகிறார் சீடர் வசந்த். இந்த நாவலில் சுஜாதா 'இன்செஸ்ட் செக்ஸ்' எனப்படும் குடும்ப உறவுகளில் தகாத உறவையும் போகிறபோக்கில் கதையில் ஆங்காங்கே தூவுகிறார். ஆனால் அதை 'Child Abuse' ஆக காட்டியிருப்பது சுஜாதா டச்.

நிர்வாண நகரம்:
சிவராஜ், வேலையில்லாத பட்டதாரி. ஆசைப்பட்ட பெண் கிடைக்கவில்லை, வேலையின்மை போன்றவை அவன் வாழும் சமூகத்தையும் நகரத்தையும் வெறுக்க செய்கின்றன. ஒரு நாள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குறிப்பிட்ட தேதியில் 'ஒரு டாக்டர் கொலை செய்யப்படப் போகிறார்' என்று சொல்கிறான். அது போலவே நடக்கிறது. அடுத்தடுத்து பல கொலைகள் டெலிபோன் வந்த பிறகு நடக்க, வழக்கு கணேஷ், வசந்த்திடம் செல்கிறது. உண்மையில், சிவராஜ் தான் கொலைகாரனா? கணேஷும் வசந்தும் எப்படி அவனை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை மிக அற்புதமாக விவரித்திருக்கிறார் சுஜாதா. முக்கியமாக, கடைசி நேர ட்விஸ்ட், கணேஷுடன் சேர்ந்து நானும் சிரித்துக்கொண்டேன், அசடு வடித்தபடி.

வைரங்கள்:
ஒரு மலையடி வார டீக்கடைக்காரனின் சின்ன நிலத்தில் ஒரு பளபளக்கும் கல்லை எடுக்கிறாள் அந்த டீக்கடைக்காரரின் மகள். அந்த ஒரு வைரக்கல். பின்பு அது ஒவ்வொருவரின் கைக்கு மாறுகிறது. அந்த வைரத்தினால் ஏற்படும் சண்டை, ஆக்ரமிப்பு, சட்ட மீறல், துரோகம், என மிக தெளிவான டீடைலிங். அந்த ராலிமுக்கு டீக்கடை, லாரி டிரைவர் தாஸ், டீக்கடைக்காரன் பெரியசாமி, அவனின் மனைவி மற்றும் காது கேட்காத, வாய் பேச வராத மனோகரி என நிறைய கதாபாத்திரங்கள். ஆனால் துளி கூட தொய்வில்லாத எழுத்து நடை. அதிகார வர்க்கத்தின் பணத்திமிரும், இல்லாதப்பட்டவனின் இயலாமையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார் சுஜாதா. நாவலை சுருக்கமாக விவரிக்க கொஞ்சம் கடினம். காரணம், கதையின் கணம்.

மூன்று நாள் சொர்க்கம்:
குரு, ராஜ் மற்றும் மனோ மூவரும் நண்பர்கள். ஒரு நாள் மூவரும் பெங்களூரிலிருந்து மங்களூர் பயணமாகிறார்கள், வீட்டுக்கு தெரியாமல். கூடவே சரஸ்வதி என்ற பருவப்பெண்ணையும் அழைத்து வருகிறான் மனோ. நால்வரும் மங்களூரில் ஊருக்கு கொஞ்சம் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் தங்குகிறார்கள். அடுத்த மூன்று நாளில் அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே நாவல். 'சின்ன காலா இருந்தாலும் நல்லாயிருக்குடா' என்று 'ரன்' விவேக் சொல்வது போல குறுநாவலாக இருந்தாலும் மிக அருமை. நாவல் பல ஜானரில் பயணப்படுவது போல தெரிந்தாலும், திரில்லர் வகையே பிரதானமாக தெரிகிறது. முக்கியமாக இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதென்னவோ உண்மை. ஆனால் சுஜாதா நாவலில், ஹாப்பி எண்டிங். 

நில் கவனி தாக்கு:
கதைசொல்லி ஒரு Anonymous. ஆம். ஒரு பெயரில்லா மனிதனின் ரகசிய உளவாளி வேலையில் வரும் சம்பவங்களை தொகுத்து எழுதப்பட்ட நாவல். தன் மேலதிகாரியின் ஆணைக்கிணங்கி ஒருவரை ரகசியமாக அழைத்து வர செல்கிறான் கதாநாயகன். அவரை அழைத்துவரும் வேளையில் அவர் மிஸ்ஸாக, கதை சூடு பிடிக்கிறது. அதைத்தொடர்ந்து, காதல், துப்பறிவு, துரோகம், தாய்நாட்டின் மீது விசுவாசம் என வித்தியாச முயற்சி.  கதைசொல்லியை ஒரு anonymous ஆக முயன்ற சுஜாதாவின் புது முயற்சி, பாராட்டுக்குரியது. கதையின் களம் டெல்லியில் நடக்கிறது. நாவலை தன் அழகான நடையில், மிக தெளிவாக சொல்கிறார் சுஜாதா.

கமர்ஷியல் கிக் - மெட்ராஸ் சென்ட்ரல்:
இன்றைய Youtube யுகத்தில் பல சேனல்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதில் புட் சட்னி, ஸ்மைல் சேட்டை, மெட்ராஸ் மீட்டர், டெம்பிள் மங்கிஸ் என பல சேனல்கள் வந்து புதிய கான்செப்ட்களில் கலக்குகிறார்கள். ஆனால் இந்த சேனல்களில் இவர்களின் கான்செப்ட் தான் ஹீரோவே தவிர அதில் நடிப்பவர்கள் தனிப்பட்ட முறையில் ரசிக்கும் ஹீரோக்கள் இல்லை என்பதே உண்மை. ஆனால் இந்த 'Madras Central' கோபி மற்றும் சுதாகர் இருவருமே பார்வையாளர்களிடம் ஹீரோ இமேஜ் பெற்றுவிட்டார்கள் என்றே சொல்லலாம். அதே போல இவர்களின் கான்செப்ட்கள் Satire வகையின் அடுத்த லெவல். வைகோ, சீமான், ரஜினிகாந்த், திரை விமர்சகர் ப்ளூ சட்டை, ஸ்டாலின் என்று கோபி அருமையாக கலக்கினாலும், கங்கை அமரன், செல்லூர் ராஜு, முக்கியமாக கலைஞர் கருணாநிதி என வெளுத்து கட்டுகிறார் சுதாகர். இவர்களின் கூட்டணியில் வந்த பல பரிதாபங்கள் வீடியோ ஒவ்வொன்றும் தெறி ஹிட். அதே போல மற்ற விடியோக்களான 'ரீல் அந்து போச்சி' முத்து, 'டாப் 10' புகழ் வருண், சுஹானுபவம் என மற்றவர்களும் அருமை.



Thanks and Regards,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக