வியாழன், பிப்ரவரி 09, 2017

மார்கழி மாத விடுமுறை நாட்கள்...

மார்கழி மாத விடுமுறை நாட்கள் 1
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிறது, சென்னையை ஆற, அமர பார்த்து. 2012 இல் என் திருமணத்திற்காக 45 நாட்கள் விடுமுறையில் வந்திருந்தேன். அதன் பிறகு இரண்டு முறை வந்திருக்கிறேன். ஆனால், ஒரு வாரம், இருபது நாள் என்று மரங்களை கடக்கும் ரயில்கள் போல நாட்கள் வேகமாக ஓடிவிடும்.
இந்த முறைதான் கொஞ்சம் எல்லாவற்றையும் நின்று பார்க்க நேரம் கிடைத்தது. இது வரை நான் மும்பை வழியாக வந்ததே இல்லை. முதல்முறையாக இந்த தடவை மும்பை வழியாக சென்னை வந்தடைந்தேன். என்ன தான் அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், மறந்து கூட பேச மாட்டேன் என்கிறார்கள் மும்பைவாலாக்கள். குடியேற்ற அதிகாரிகள் கூட ஹிந்தி தான். இந்தியா என்பது பல மொழிகள் பேசும்  மாநிலங்கள் நிறைந்த நாடு என்பதை மறந்து விட்டார்கள் போல. ஹிந்தி கொஞ்சம் தெரிந்ததால் சமாளித்து வந்திறங்கினேன்.

சென்னை நிறையவே மாறியிருக்கிறது. விலைவாசி, மாநகர மேம்பாடு, நாகரிக வளர்ச்சி என்று எவ்வளவோ மாறுதல்கள். விலைவாசியை 'ஐயோ' என்றபடியும், மாநகர மேம்பாட்டினை 'அட' என்றபடியும், நாகரீக வளர்ச்சியினை 'ஆஹான்' என்றபடியே எதிர் நோக்கவேண்டியிருந்தது. செய்யவேண்டிய பல வேலைகளை கூடுமானவரை முடித்ததே இந்த விடுமுறையின் சிறப்பம்சம் எனலாம். குறைந்தது பத்து பெரிய கோயில்களுக்காவது செல்ல எண்ணியிருந்தேன். அதில் பாரிஸ் காளிகாம்பாள் கோயில், சென்ட்ரல் பாடிகாட் முனீஸ்வரன் கோயில், மயிலை கபாலீஸ்வரர் கோயில் மற்றும் சாய்பாபா கோயில் & வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலும் இன்னும் சில கோயில்களை மட்டுமே தரிசிக்க முடிந்தது. என் மகளை அண்ணா நகரில் உள்ள CSI JESSY MOSES பள்ளியில் LKG சேர்ப்பித்தேன். பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இரண்டையும் ஒரு வழியாக எடுத்து முடித்து, SBI பாங்கில் NRI கணக்கை துவங்கினேன்.
மார்கழி மாத விடுமுறை நாட்கள் 2
நெருங்கிய நண்பனின் குடும்பத்தோடு என் குடும்பமும் சேர்ந்து மெரினா பீச் வரை சென்று, களித்து வந்தோம். புத்தாண்டை வீட்டில் குடும்பத்தோடு கேக் வெட்டி கொண்டாடினோம். நண்பனுடன் சேர்ந்து சில முறை டாஸ்மார்க் சென்று வந்தேன், நான் மட்டும் குடிக்காமல். PALAZZO சினிமாஸில் விஜய்ண்ணாவின் 'பைரவா' படம் பார்த்தேன். தம்பி மற்றும் தங்கைகள், அவர்களின் குடும்பங்களோடு நுங்கம்பாக்கம் 'மாப்ள' உணவகத்திற்கு சென்று, சிரித்து கதைகள் பேசியும், ருசித்து சாப்பிட்டும் வந்தோம். 40 வது புத்தகத் திருவிழாவிற்கு தங்கைகளுடன் சென்று சில பல புத்தகங்களையும் வாங்கி வந்தேன் (புத்தக திருவிழாவை பற்றிய அடுத்த பதிவில் எழுதுவேன்). இது போல பல விஷயங்கள் நடந்து முடிந்தாலும், பணப்பிரச்சனை மட்டும் தீர்ந்த பாடில்லை. இந்த தடவை மொத்த செலவும் கடன் வாங்கியே கழிக்கவேண்டிய இறுக்கமான சூழ்நிலையும் எனக்கு இருந்தது. அதனால் மத்திய அரசு என்னிடம் பெரிதாக திட்டுக்கள் வாங்கவில்லை எனலாம்.

வெளிநாட்டில் வேலை செய்ய வந்து முழுமையாக 7 ஆண்டுகள் ஓடிவிட்டது. என்னோடு பணிபுரிந்த பல நண்பர்கள் இப்போது இந்தியாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். ஒவ்வொரு தடவை இந்தியாவிற்கு வந்து விடுமுறையை கழித்து, திரும்பவும் ஊருக்கு கிளம்பும்போது, கொண்டு போகும் பெட்டியை முன்பே எடை போட்டு பார்த்து, டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள எடை அளவு இருக்கிறதா என்று சோதித்தே விமான நிலையத்திற்கு புறப்படுவேன். இந்த தடவை அது போல பெட்டிகளை எடை போட்டு பார்த்து விட்டு வரும் போது நண்பன் சொன்னது, 'இதுவே கடைசியா இருக்கட்டும் டா '.

முன்பிலிருந்தே இது நமக்கு கடைசியாக இருக்குமா? இருக்காதா? என்ற குழப்பம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும், குடும்ப சுமைகளும், கடமைகளும் என்னை அடிக்கடி அமைதிப்படுத்தியே இத்தனை நாட்கள் வைத்திருந்தது. இந்த முறை இது கடைசியாகவே இருக்கவேண்டும் என்று பெரிதாக ஆசைப்படுகிறேன். நடக்கும் என்ற நம்பிக்கையை தவிர பெரிதாக பிடிப்பு எதுவும் இப்போதுவரை கண்களுக்கு புலப்படவில்லை. விமானம் ஏறும்போது மனபாரம் அதிகரித்திருந்தது. மகள் இல்லாமல் இனி சில மாதங்கள் இருக்கப்போகிற கவலை. ஆனால் வேறு வழியில்லை. வருவேன், கூடியவிரைவில் என் மகளுக்காக...



Thanks and Regards,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக