புதன், ஜூலை 15, 2015

மெல்லிசை மன்னர் M.S.V யின் மறக்க முடியாத பாடல்கள்...

இப்போது தான் அவரின் உடலை தகனம் செய்ததாக செய்தி படித்தேன். கடந்த சில தினங்களாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை நான் அறிவேன். அவர் மீண்டு வரவேண்டும் என்று நான் வேண்டிக்கொள்ளவில்லையே தவிர, மீண்டும் அவர் வருவாரா என்று அச்சம் மட்டும் கொண்டேன். காரணம், அவரின்
வயது. நேற்று காலையில் அவரின் மரண செய்தி தெரிந்தவுடன் என் பயம் கலந்த சந்தேகம் நிஜமாகிவிட்டது. கிட்டத்தட்ட 1200 படங்களின் இசையமைப்பாளர், எத்தனையோ விருதுகள், எவ்வளவோ கௌரவங்கள், திகட்ட திகட்ட வெற்றிகளை இவர் பார்த்திருந்தாலும், எதையும் தலைமேல் ஏற்றிக்கொள்ளாத கலைஞன். இவர் இந்திய இசையின் ஓர் முக்கிய அங்கம். அவர் இசையமைத்த எல்லா பாடல்களும், திருட்டு என்ற செப்பு கலக்காத சுத்த தங்கம். இந்த பதிவு வெறும் நினைவு பகிர்தல் அல்ல. ஏன் தெரியுமா? ஏதாவது ஒரு வகையில் அவரின் பாடல்கள் எப்போதும் மனதில் நிறைந்திருக்கும்போது, மறப்பதெப்படி? தமிழ் இசை இருக்கும்வரை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையும் என்றும் அழியாமல் இருக்கும்.

பாடல்: ஆட்டுவித்தால் யாரொருவர்
படம்: அவன்தான் மனிதன்

அடிக்கடி நான் பாடும் பாடல் இது. ஹை பிச்சில் வரும் சோகம் கலந்த, தன்னம்பிக்கை பாடல். நான் பார்த்த சிவாஜி பாடல்களில் இந்த பாடல், சற்று ஸ்பெஷல் எனக்கு.

பாடல்: கண்ணை நம்பாதே
படம்: நினைத்ததை முடிப்பவன்

புரட்சித் தலைவரின் தத்துவப் பாடல். பாடலின் மெட்டும் இசையும், நம்மை உற்சாக மனநிலைக்கு கொண்டு செல்லும் எம்.எஸ்.வியின் இசை.

பாடல்: வசந்தகால நதிகளிலே
படம்: மூன்று முடிச்சு

காதல் பாடலான, மெல்லிசையாக ஆரம்பிக்கும் பாடல், முடியும்போது அதற்க்கு நேர்மாறாக இருக்கும். குறிப்பாக ரஜினி என்ற வில்லனுக்கு பொருத்தமாக பாடவேண்டும் என்ற காரணத்திற்க்காக. தன் குரலையே கொஞ்சம் போல்டாக மாற்றிப் பாடிய மெல்லிசை மன்னரை போன்ற இன்னொருவர் மீண்டும் கிடைப்பாரா?

பாடல்: ராகங்கள் பதினாறு
படம்: தில்லு முள்ளு

என்ன ஒரு அழகான பாடல். இந்த மெலடி பாட்டிற்கு எதிர் நிற்க வேறு பாடல் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கவைக்கும் அளவுக்கு இசை அமைத்திருப்பார் எம்.எஸ்.வி. அதிக வாத்தியங்கள் இல்லாமல், மிக இயல்பாக இருக்கும் இந்த பாடலின் மெட்டும், இசையும்.

பாடல்: உனக்கென்ன மேலே நின்றாய்
படம்: சிம்லா ஸ்பெஷல்

சோகமும், கோபமும் ஒருசேர வந்திருக்கும் பாடல், இது. பாடலின் மெட்டுக்களை சற்று கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? மெட்டில் மென்மையும், பாடலின் வரிகளின் உணர்ச்சிகளும் ஒரு சேர பாடலை கொடுத்திருப்பார் எம்.எஸ்.வி.




Thanks and Regards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக